Also Watch
Read this
By: Manigandan Raja
அதிமுக என்ற கட்சி உடைந்து, சின்னாபின்னமாகி விட்டதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில், திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் கூறி உள்ளார்.

திமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் திமுகவில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இணைப்பு விழாவா? இணைப்பு விழா மாநாடா?
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி இருப்பதாவது:
இது இணைப்பு விழாவா? இணைப்பு விழா மாநாடா? என்று எண்ணக்கூடிய அளவுக்கு, இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் பேசாமல் போனால், உங்களுக்கு நிம்மதி இருக்காது, எனக்கும் நிம்மதி இருக்காது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், திமுகவில் இணைத்து கொண்டு இருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையில் வைத்திலிங்கம் பணியாற்றிய போது, சுறுசுறுப்பாக பணியாற்றிய காட்சியை நாம் பார்த்தது உண்டு.

சுயமரியாதையுடன் இயங்க முடியவில்லையே...
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, அதிமுக உடைந்து சின்னாபின்னாமாகி இருந்த நிலையில், வைத்திலிங்கம் சட்டசபையில் அமர்ந்து இருக்கும் காட்சியை நான் பார்ப்பேன். அவர் முகத்தில் ஒரு சோர்வு இருந்து கொண்டு இருக்கும். வேண்டா வெறுப்போடு சில கேள்விகளை கேட்பார். அவர் உள்ளத்தில் சுயமரியாதையுடன் இயங்க முடியவில்லையே? என்ற எண்ணம் இருந்து கொண்டு இருக்கிறது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வைத்திலிங்கம் பணியாற்ற போகிறார்.

வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு
தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கிறது. தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறோம். இணைந்து இருக்கும் தொண்டர்களையும், வைத்திலிங்கத்தையும் வரவேற்கிறேன். தேர்தல் பணியாற்ற உறுதியேற்போம், சபதம் ஏற்போம். மீண்டும் திமுக அரசு உதயமாகி ஏற்கனவே செய்திருக்கும் சாதனைகளை மிஞ்சக்கூடிய பல சாதனைகளை உருவாக்கி தருவதற்கு நம்முடைய பணிகள் மும்முரமாக இருக்க வேண்டும். வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு, ஒன்றாக வெல்வோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved