கொள்ளை : ஈரோடு தாலுக்கா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ரங்கம்பாளையம், ரயில்நகரை சேர்ந்த முத்துக்குமார், லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த நவநீத் மற்றும் ஜீவா நகரைச் சேர்ந்த கண்ணம்மாள் ஆகியோரின் பூட்டிய வீடுகளை கொள்ளையர்கள் வீடுகளின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று மூன்று வீடுகளிலிருந்து 12 ¾ சவரன் தங்க நகைகளை திருடி சென்றனர். கடந்த மாதம் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மூவரும் அளித்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் முகமூடி அணிந்த மூன்று பேர் வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் மீண்டும் கொள்ளை அடிப்பதற்காக ரயில் நிலையம் வந்த மூவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் மூவரும் கர்நாடக மாநிலம் தாவணகெரே பகுதியை சேர்ந்த தர்ஷன், வென்ஷன் (20) மற்றும் சந்துரு (25) என தெரியவந்தது. மூவரும் ரயிலில் ஈரோடு வந்து இருப்புப் பாதை வழியாக சென்று பூட்டிய வீடுகளை கண்டறிந்து.திட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டு பின்னர் ரயிலில் கர்நாடகாவிற்கு தப்பி சென்றது தெரியவந்தது. திருடிய நகைகளை பெங்களூரில் விற்பனை செய்த இவர்கள் அந்தமான் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பணத்தை செலவு செய்துள்ளனர். இவர்கள் மீது கர்நாடகாவில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் நகைகளை வாங்கிய நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிந்த போலீசாருக்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா பாராட்டுகளை தெரிவித்துள்ளார். Related Link தேவாலய வளாகத்தில் நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்தது