ஆட்சியில் பங்கு கொடுக்காவிட்டால், த.வெ.க. பக்கம் தாவிவிடுவோம் என்பது போல், காங்கிரஸ் கட்சியினரின் செயல்பாடு இருந்த நிலையில், திமுக - காங்கிரஸ் இடையே முதற்கட்ட தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.41ல் ஆரம்பித்து கடைசியாக 23 தொகுதிகளுக்கு திமுக தரப்பு தலையாட்டி உள்ளதாக பேச்சு அடிபடும் நிலையில், த.வெ.க. உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக எங்குமே காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசவே இல்லை என டென்ஷன் ஆகி உள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.”ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” ”ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்று விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். இதற்கு ஏற்றார்போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும், வரும் தேர்தலில் 39 தொகுதிகளை கேட்டதாக தெரிகிறது. அதேபோல், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும், ஆட்சியில் பங்கு கேட்பது தங்களின் உரிமை எனவும் லாப நஷ்டத்தை எதிர்பார்க்காமல் இருக்க நாங்கள் என்ன என்ஜிஓ-வா நடத்துகிறோம் எனவும் கொந்தளித்ததாகவும் கூறப்பட்டது. இதற்குமத்தியில், சென்னை அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 23 தொகுதிகள் தான் ஃபைனல் முதற்கட்டமாக நடந்த பேச்சுவார்த்தை ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. சாதாரணமாக 5 முதல் பத்தே நிமிடத்தில் நடக்கும் பேச்சுவார்த்தை இந்தமுறை மணிக்கணக்கை தாண்டியதற்கு காரணம் தொகுதி பங்கீட்டு இழுபறிதானாம். முதலில் காங்கரஸ் தரப்பில் 41 தொகுதிகள் கேட்டதாக கூறப்படுகிறது. அது முடியாது என திமுக தரப்பில் சொல்லப்பட்டதாகவும், அடுத்து 39, 29,28 என பேரம் குறைந்துகொண்டே போனதாக சொல்லப்படுகிறது. தேமுதிக, ம.நீ.ம., ஓபிஎஸ் என புதுக்கட்சிகளும் ஐக்கியமாகி உள்ளதாகவும், அதனால் 23 தொகுதிகள் தான் ஃபைனல் என திமுக தரப்பில் காங்கிரஸாரிடம் உறுதியாக கூறிவிட்டதாகவும் தெரிகிறது. பேச்சுவார்த்தை சுமூகம் - செல்வப்பெருந்தகை இது ஒருபுறமிருக்க திமுக உடனான பேச்சுவார்த்தைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, தங்களுக்கு என்ன தேவையோ அதனை திமுக தலைமையிடம் கேட்டுள்ளோம், அதனை அவர்களும் பரிசீலிப்பதாகவே கூறி உள்ளார்கள், பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாக கூறினார். மேலும், காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக கூறிய அவர், எங்கள் கூட்டணி ஐடியாலஜிக்கல் கூட்டணி, இயற்கையான கூட்டணி, நம்பிக்கையான கூட்டணி, தமிழ் மண்ணை பாதுகாக்கும் கூட்டணி, மதநல்லிணக்கத்தை விரும்பாதவர்களை விரட்டும் கூட்டணி என திமுக உடனான பிணைப்பை அடுக்கினார். சொல்லாததை திரித்து பேச வேண்டாம்அதோடு, தமிழ்நாட்டில் பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் ஒருபோதும் இடமில்லை என்பதில் தெளிவாக இருப்பதாகவும் கூறினார். அதேபோல், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் த.வெ.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக எங்குமே கூறவில்லை என கூறிய செல்வப்பெருந்தகை, சொல்லாததை திரித்து வெளியில் பேச வேண்டாம் என டென்ஷன் ஆனார். Related Link உழைப்பு... உழைப்பு... உழைப்பு...