திருப்பூர் மாவட்ட சிறையிலிருந்து கைதி தப்பிய சம்பவம் தொடர்பாக, 5 பேரை பணியிடை நீக்கம் செய்து கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவிட்டார். வழிப்பறி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சூர்யா என்பவர் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சனிக்கிழமை மாலை வருகை பதிவினை சரிபார்த்தபோது கைதி சூர்யா தப்பியது தெரியவந்தது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிறையின் உதவி சிறை அலுவலர்களான கங்காராஜன், சீதா, முதல்நிலைக் காவலர் ராஜபாண்டி, இரண்டாம் நிலை காவலர்களான சக்திவேல், ரவிக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.