அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப்பொறியாளராக பணியாற்றிய காளிப்ரியன் என்பவரது சொத்துகள் மற்றும் கடன் விவரங்களைக் கேட்டு, திம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். ஆனால் அரசு ஊழியரின் தனிப்பட்ட விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டவை எனக் கூறி, தகவல்கள் மறுக்கப்பட்டது. அதனை எதிர்த்து சீனிவாசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அரசு ஊழியரின் சொத்து மற்றும் கடன் விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல எனக் கூறி தகவல்கள் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.