Also Watch
Read this
By: Manigandan Raja
நீலகிரி மாவட்டம், கூடலூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற ராகுல்காந்தி, படுகர் இன மக்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தார். பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், பழைய பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு, கல்வி தனியார் மயமாக கூடாது என்றும், சிறந்த கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சிறப்பு அழைப்பாளராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள புனித தாமஸ் பள்ளியின் பொன் விழாவில் சிறப்பு அழைப்பாளராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று, மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ராகுல்காந்தி மைசூரில் இருந்து ஹெலிகாப்டரில் இருந்து கூடலூர் வந்தடைந்தார்.
ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு
காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் பள்ளி மைதானம் வரை, சாலையில் காத்திருந்த மக்களும் வரவேற்பு அளித்தனர். அப்போது படுகர் இன மக்களுடன் சேர்ந்து ராகுல்காந்தி நடனமாடி மகிழ்ந்தார்.
மாணவர்களுக்கு பொங்கல் வழங்கிய ராகுல்
அதனை தொடர்ந்து, புனித தாமஸ் பள்ளி சார்பில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் பொங்கலை அவருடைய கையால் எடுத்து மாணவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தார். பள்ளி மாணவர்கள் ராகுல் காந்தியை மிக அருகில் பார்த்து அவர் கொடுத்த பொங்கலை வாங்கி மகிழ்ந்தனர்.
அனைவரும் எழுந்து நின்று வரவேற்பு
சாரல் மழையில் மேடைக்கு வந்த ராகுல் காந்தியை பார்த்து மைதானத்தில் இருந்த மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைவரும் எழுந்து நின்று வரவேற்பு அளித்தனர். மேடையில் இருந்த மாணவர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடி மகிழ்ந்தார்.
மழை வந்தும் குடையை தவிர்த்த ராகுல்காந்தி
நிகழ்ச்சி தொடங்கிய உடன் மழையின் வேகம் சற்று அதிகரித்த நிலையில், ராகுல் காந்தி அருகில் அமர்ந்திருந்தவர் அவருக்கும் சேர்த்து குடை பிடித்த நிலையில், இதனை பார்த்த உடன் எனக்கு வேண்டாம் என கூறியதோடு பாதுகாவலர் கொண்டு வந்த குடையையும் தவிர்த்தார்.
கல்வி தனியார்மயமாக கூடாது
விழா மலரை வெளியிட்டு உரையை தொடங்கிய ராகுல் காந்தி, தனியார் பள்ளிகள் இருக்கலாம், ஆனால் கல்வி தனியார்மயமாக கூடாது என்றும், சிறந்த கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டும், அதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் வாழ்வதற்கு நடவடிக்கை
தொடர்ந்து பேசிய அவர், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும் தற்போது உள்ள மத்திய அரசின் ஜனநாயகம் ஒரு கேள்விக்குறியாக உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். அதனை காப்பாற்றவே தற்போது குரல் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ள ராகுல்காந்தி, இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்கள் தங்களது உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதில்
அதனை தொடர்ந்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதில் அளித்தார். அதில் குறிப்பாக. பள்ளி காலத்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட அவர், விடுதியில் தங்கி படித்ததாகவும், பிடிக்கவில்லை என்றாலும் பெற்றோர்களுக்காக அங்கிருந்து படித்ததாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved