Also Watch
Read this
By: Manigandan Raja

மேடை சரிந்து விபத்து :
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு தர்மராஜர் திரௌபதி அம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா கோவில் அருகே சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து மகாபாரத நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு அமைக்கப்பட்டிருந்த 2மேடைகளில் ஒன்று கூட்ட நெரிசல் மற்றும் பாரம் தாங்காமல் திடீரென சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் பெண் பக்தர்கள் கோமதி, சின்னம்மாள் மற்றும் புவனேஸ்வரி உள்ளிட்ட பல பெண்களுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து காயமடைந்த கோமதி மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற பெண்களுக்கு ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீமிதி திருவிழாவில் மேடை சரிந்து விழுந்து பெண்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved