கரூரில் த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க டெல்லிக்கு வரும்படி விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கரூர் விவகாரத்தில் த.வெ.க. நிர்வாகிகளிடம் 2 கட்டமாக கரூரிலும், டெல்லியிலும் விசாரணை நடத்திய சிபிஐ, கடை சியாக விஜய்யை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் நிலையில், பின்னணி என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. கரூர் துயர சம்பவம் குறித்து, சுற்றி சுழன்று மின்னல் வேகத்தில் விசாரணை நடத்தி வரும் சிபிஐ, கடைசியாக விஜய்க்கு குறி வைத்து சம்மன் அனுப்பியுள்ளது.செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூரில் விஜய்யின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரசியல் வரலாற்றிலேயே கரும்புள்ளியாக மாறியது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி கண்காணிப்பில் கரூர் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. முதலில் கரூரில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள், த.வெ.க. நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அதோடு, கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி., விஜய் பிரச்சார நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கிய டிஎஸ்பி ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதோடு, கூட்டத்திற்கு சென்று உயிரை இழந்தவர்களின் குடும்பத்தினரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது. தொடர்ந்து, 2ஆம் கட்ட விசாரணை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில், இறுதியாக விஜய்க்கு சம்மன் அனுப்பியுள்ளது சிபிஐ.வருகிற 12ஆம் தேதி டெல்லியிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய்யை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. விஜய்யை விசாரணைக்கு அழைக்க முடிவு செய்த போதே, அவரிடம் என்னென்ன மாதிரியான கேள்விகளை முன் வைக்க வேண்டும் என்ற பட்டியலை சிபிஐ தயார் செய்து விட்டதாம். அந்த வகையில், கரூர் பிரச்சாரத்திற்கு திட்டமிட்டே தாமதாக சென்றதாக விஜய் மீது எழுந்த முக்கியமான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. கரூர் பிரச்சார கூட்ட த்திற்கு போலீஸ் தரப்பில் கொடுக்கப்பட்டு இருந்த நேரம் பிற்பகல் 3 மணியில் இருந்து 7 மணி வரை என்ற நிலையில், த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் 12 மணிக்கு விஜய்யின் மக்கள் சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கூட்டம் காண்பிக்க விஜய் திட்டமிட்டு தாமதமாக வந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அது குறித்து கேள்விகள் முன் வைக்கப் படும் என கூறப்படுகிறது. கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக பிரச்சார வாகனத்தை முன் கூட்டியே நிறுத்த சொல்லி போலீஸ் கூறியும் த.வெ.க.வினர் கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்தும் விஜய்யிடம் கேள்வி எழுப்ப வாய்ப்பு இருக்கிறது. போலீஸ் அறிவுறுத்தல் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா? தனது கவனத்திற்கு வந்தும் கூட வாகனத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வற்புறுத்தினாரா விஜய் என்ற தொனியிலும் கேள்விகள் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதோடு, கரூர் பார்டரில் பிரச்சார வாகனம் எண்ட்ரீ ஆனதும், முன் இருக்கையில் இருந்து எழுந்து விஜய் உள்ளே சென்று விட்டார் என்பதால் சாலையில் இரு பக்கமும் கூடியிருந்த மக்களும் வேலுச்சாமிபுரம் நோக்கி வந்து விட்டார்கள் எனவும், கூட்ட நெரிசலுக்கு இதுவும் ஒரு காரணம் எனவும் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவ்வளவு நேரம் முன் இருக்கையில் அமர்ந்து விட்டு கரூர் வந்ததும் பின் இருக்கைக்கு சென்றது ஏன்? வேலுச்சாமிபுரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற திட்டத்துடன் பின்னாடி சென்றாரா? அல்லது என்ன நடந்தது என்பது குறித்து விஜய்யிடம் கேள்விகள் முன் வைக்கப்படும்.இவையெல்லாவற்றையும் தாண்டி முக்கியமான விஷயம் என்னவென்றால், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் ஆதரவு தெரிவித்த நிகழ்வு தான். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் வைத்து சந்தித்து பேசினார் விஜய். அந்த நிகழ்வுகளில் மீடியாக்களுக்கு அனுமதி அளிக்கப்படாத சூழலில் சாட்சிகளை கலைக்கும் வகையில் விஜய் செயல்பட்டாரா? அந்த சூழலில் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசியது என்ன? என்பது குறித்தும் விஜய்யிடம் சிபிஐ கேள்விகளை கேட்கும் என சொல்கிறது டெல்லி வட்டாரம்.கரூர் விவகாரத்தை பொறுத்தவரையில், விஜய்க்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவது வழக்கமான நடைமுறை தான் என்றாலும், இந்த அழைப்பை அரசியலுடன் தொடர்புபடுத்தாமலும் இருக்க முடியாது. ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடந்தாலும் விசாரணை நடத்தும் சிபிஐ அமைப்பு, பாஜகவின் கைக்குள் தான் இருக்கிறது. ஆகையால், கரூர் விவகாரத்தை வைத்து விஜய்யை கூட்டணி வலையில் சிக்க வைக்க பாஜக எடுக்கும் முயற்சியாகவும் சம்மன் நடவடிக்கை இருக்கலாம் என கருதப்படுகிறது. எத்தனையோ வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே கரூர் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என, சிபிஐ தீவிரம் காட்டுவதற்கு, விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜகவின் நெருக்கடியாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. கரூர் விசாரணை முடிவு விஜய்யின் அரசியல் பயணத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த போகிறது? எப்படி தீர்மானிக்க போகிறது? என்று போக போக தான் தெரியும்.