Also Watch
Read this
ஆட்சிக் கலைப்பு அல்லது கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு கிடையாது என்று, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்து உள்ளார். மூன்று மாதம் கூட தாங்காது என்ற நிலையில் தான் ஆட்சி போய் கொண்டு இருக்கிறது என ஸ்டாலின் பேசியது திரித்து பரப்பப்படுவதாகவும் விமர்சித்து உள்ளார்.
தங்கம் தென்னரசு அறிக்கை
இதுகுறித்து திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது;
தமிழ்நாட்டில் புதிதாக ஒரு ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதமும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை மருந்து நடமாட்டமும் தான் செய்திகளாக உள்ளன. பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளும் கட்சியான த.வெ.க. நிர்வாகிகளே சம்பந்தப்பட்டு உள்ளனர்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்தக் கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அந்தப் பெண்ணால் குற்றம் சாட்டப்படும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது இதுவரை நடவடிக்கை இல்லை. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறது தூய சக்தி என்று, கபட வேடம் போடும் அரசு.

மூன்று மாதம் தாங்காது
“இந்த ஆட்சியை ஆறு மாதம் விமர்சிக்க மாட்டோம்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருந்தாலும், நிலைமை மிக மோசமாகப் போய் வரும் நிலையில் அவர் விமர்சனம் செய்தார். “ஆறு மாதம் அல்ல, மூன்று மாதம் கூட தாங்காது என்ற நிலைமையில் தான் ஆட்சி போய்க் கொண்டு இருக்கிறது” என்று பேசினார். ஆனால், மூன்று மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று அவர் சொன்னதாகத் திரித்து பரப்பப்படுகிறது.

திமுக தலைவர் என்ன கூறினார்?
இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தி.மு.க. தலைவர் இப்படி பேசியிருக்கக் கூடாது என்று கூறி உள்ளனர். ஆட்சி கவிழும்
என்று தலைவர் பேசவுமில்லை; அது அவரது நிலைப்பாடும் அல்ல.
“ஆறு மாதம் வரை, இந்த ஆட்சி பற்றி விமர்சித்துப் பேசப் போவதில்லை” என்று அவர் கூறி இருந்தார். ஆனால் நாள்தோறும் கொலை, கொள்ளை, அரிவாள் வெட்டு, போதை மருந்து நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சு, மின் வெட்டு, விவசாயிகள் போராட்டம், பாலியல் வன்கொடுமை நடப்பதைப் பார்க்கும் போது, இதை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும் என்ற பொருளில், “மூன்று மாதமாவது தாங்குமா? என்ற கேள்விக்குறியோடு தான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்று பொருள்படும்படிதான் சொன்னார்கள்.

மக்களே களைத்துப் போய்விட்டார்கள்
ஆசை அறுபது நாள் என்பார்கள். ஆனால், இன்றைய ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்கள் ஒரு வாரம் தான் அமைதியாக இருந்தார்கள். சமூக வலை தளங்கள் முழுக்கவே ஆளும் கட்சிக்கு எதிரான ஆவேசமான கருத்துகளைத் தான் மக்கள் கூறிவருகிறார்கள். இதைத்தான் தலைவர் மு.க.ஸ்டாலின், தனது உரையில் சுட்டிக் காட்டினார்கள். கலைப்பு,
கவிழ்ப்பு எண்ணத்தோடு அல்ல. மக்களே களைத்துப் போய்விட்டார்கள் அதற்குள்.
இவ்வாறு தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved