Also Watch
Read this
Posted on: Jan 24, 2026 07:31 AM
By: Manigandan Raja
தேசபக்தி குறித்து எங்களுக்கு யாரும் பாடமெடுக்க வேண்டாம் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக பேசி உள்ளார். தேசபக்தி குறித்து பாடமெடுக்கும் அளவிற்கு, அவர்கள் தேசத்திற்காக போராடியவர்கள் அல்ல என்றும் விமர்சித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 20ஆம் தேதி கூடியது. அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் புறக்கணித்துச் சென்றார். இது சர்ச்சையானது. இந்நிலையில் ஆளுநரின் செயல்பாடு குறித்து இன்று 24ஆம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் காட்டமான வாதங்களை முன்வைத்தார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தின் நலனுக்காக செயல்பட வேண்டிய ஆளுநர், தமிழக மக்களுக்காகப் பாடுபடும் எங்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது. ஆளுநர் தாம் படிக்க வேண்டிய உரையைப் படிக்காமல் செல்வது வேடிக்கையாக உள்ளது. இதன்மூலம், அவர் வகிக்கும் பதவியையே அவர் அவமானப்படுத்துகிறார். ஒரு பொறுப்புமிக்க பதவியில் இருந்து கொண்டு அதை கேவலப்படுத்துகிறர். கடந்த மூன்றாண்டுகளாக நமது ஆளுநர் ஒரே காரணத்தைத் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தயாரித்துக் கொடுத்த உரையைப் படிக்காமல் வெளியேறுவது என்பது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவாலாகவே இந்த பேரவை கருத வேண்டி உள்ளது.
யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல, நாங்கள்
இந்த அரசு கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. கோடிக்கணக்கான மக்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் செயல்படக்கூடிய அரசு இது. ஆளுநர் உரை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், முடிவடையும்போது நாட்டுப்பண் பாடுவதும் தமிழக சட்டப்பேரவையின் மரபு. முதலிலேயே நாட்டுப்பண் பாடவில்லை என்பதை திரும்ப திரும்ப குற்றச்சாட்டாக, ஆளுநர் கூறி வருகிறார். இந்த நாட்டின் மீதும், நாட்டுப்பண் மீதும் அளவற்ற பெருமதிப்பையும் மரியாதையும் கொண்டுள்ளவர்கள் நாம். தேசிய ஒருமைப்பாட்டிலும் நாட்டுப் பற்றிலும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல நாங்கள் என்பதை ஆளுநருக்கு அழுத்தமாகவும் திருத்தமாகவும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
விளக்கம் அளித்துப் பேச வேண்டிய நிலை
யாரும் எங்களுக்கு தேசபக்தி குறித்து பாடம் எடுக்கும் நிலையில், நாங்கள் இல்லை. தேசபக்தி பாடம் நடத்தக்கூடிய அளவிற்கு இந்த தேசத்திற்காகப் போராடியவர்களும் அவர்கள் இல்லை. ஜனநாயகத் தேசத்தில் அரசியலமைப்பு மாண்பை அதிகாரத் தன்மையோடு மாற்ற நினைப்பவர்கள் தான், இன்றைய காலகட்டத்தில் தேச விரோதிகள். அவர்கள் யார்? என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்க வேண்டிய நான், இன்று ஆளுநருக்கு விளக்கம் அளித்துப் பேச வேண்டிய நிலையில் இருக்கிறேன்.