பிப்ரவரி 6ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்குவதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் மனுக்களை பெற்று 14 ஆம் தேதிக்குள் நிரப்பி அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாக திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் வெற்றித் தலைவர் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது. இந்த களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி, அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.234 தொகுதிகளிலும்...வருகின்ற சட்டமன்றத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்கின்றோம். தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நம் வெற்றித் தலைவரின் ஆசி பெற்ற வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் தோழர்கள் தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 14ஆம் தேதி சனிக்கிழமை வரை, தவெக தலைமை நிலையகத்தில் வழங்கப்படுகிறது.உரிய ஆவணங்களுடன்...பிப்ரவரி 6ஆம் தேதி அன்று நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாள்களில் காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும். இதைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவரின் ஆணைக்கிணங்க, தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Related Link முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி