Also Watch
Read this
By: Web Team
சென்னை, ராயபுரத்தில் வேலைக்கு செல்லும் பெண்களிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு, பெண் தூய்மை பணியாளர் கும்மாங்குத்து கொடுத்த சம்பவம் அரங்கேறியது. 56 வயதிலும் எக்குத்தப்பான ஆசை எட்டிப் பார்க்க கடைசியில் உயிரை காப்பாற்றிக் கொள்ளவே படாதபாடு பட்ட நிகழ்வு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
சென்னை, ராயபுரத்தில் பூங்கா அருகே சில தூய்மை பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பெண் தூய்மை பணியாளருக்கு அருகில் சென்ற முதியவர், ஏதோ ஆபாசமாக சைகை காட்டியதாக கூறப்படுகிறது. முதலில் தூய்மை பணியாளர் அமைதியாக கடந்து சென்று விட்ட நிலையில், மீண்டும் மீண்டும் சைகை காட்டி, அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு, மூன்று நாட்களாகவே அதே இடத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, பெண் தூய்மை பணியாளரிடம் செல்போன் எண் கேட்டு டார்ச்சர் செய்திருக்கிறார் முதியவர். செல்போன் எண் கேட்டு முதியவர் கொடுத்த இம்சையை கண்டு கொள்ளாமல் சென்று விட்ட தூய்மை பணியாளரை, இன்னும் ஆத்திரப்படுத்தும் வகையில் அநாகரீக செயல்களில் ஈடுபட்டு
சைகை காட்டியதாக சொல்லப்படுகிறது. இதனை பார்த்து டென்ஷன் ஆன தூய்மை பணியாளர், அந்த முதியவரை அடி வெளுக்க தொடங்கினார்.
கீழே கிடந்த கட்டையை எடுத்து முதியவரை வெளுத்து வாங்கிய அந்த பெண் தூய்மை பணியாளர், என்ன நினைத்தாரோ கும்மாங்குத்து குத்தி, கதிகலங்க வைத்தார். பெண் தூய்மை பணியாளரின் கும்மாங்குத்தை சமாளிக்க முடியாமல் முதியவர் திணற, அங்கிருந்தவர்கள் தான் மீட்டு போலீசிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், விசாரணையில் சில்மிஷத்தில் ஈடுபட்டது, கொடுங்கையூர் எம்.ஆர். நகர் பகுதியை சேர்ந்த ஜாகீர் உசைன் என்பது தெரியவந்தது. ராயபுரத்திலுள்ள ஒரு ஹோட்டலில் FOOD DELIVERY வேலை செய்து வந்த ஜாகீர் உசைன், டெலிவரிக்கு செல்லும் நேரம் தவிர்த்து மற்ற நேரம் வேலைக்கு செல்லும் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அடிக்கடி முதியவர் ஜாகீர் உசைன் தகாத செயல்களில் ஈடுபட்டு, ஆபாச சைகை காட்டி வருவது தெரிந்து தான், அந்த தூய்மை பணியாளர் துவைத்து எடுத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், பொதுமக்கள், புரட்டி எடுத்து முதியவரை முத்தியால்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved