Also Watch
Read this
By: Web Team

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, ஜி-ராம்-ஜி திட்டம் என பெயர் மாற்றப்பட்ட திருத்த மசோதா, எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு நடுவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாட்களாக உயர்த்தப்பட்டாலும் 100 சதவீதம் மத்திய அரசு நிதி அளித்து வந்த இத்திட்டத்துக்கு இனி, மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி அளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேறியது
100 நாள் வேலைத் திட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தி மக்களவையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். ஆனால் கோரிக்கையை ஏற்க மறுத்து மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் பேசத் தொடங்கியதால் ஆத்திரமடைந்த எம்.பி.க்கள் சிலர், மசோதா நகலை கிழித்து எறிந்தனர்.
நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
மகாத்மா காந்தியின் பெயரை எடுத்து விட்டு, ஜி-ராம்-ஜி என்ற பெயரில் ஊரக வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் ஒன்று கூடி கண்டன பேரணி நடத்தினர். மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதன் மூலம் அவரை மத்திய அரசு அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறினர்.
காந்தி பெயரிலான திட்டத்தை மீட்கும் வரை ஓயப்போவதில்லை - கார்கே
ஊரக வேலை திட்டத்தில் குளறுபடிகளை செய்து, ஏழை மக்களின் உரிமையை மோடி அரசு பறித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் மூலை முடுக்கு வரை சென்று, தொடர் போராட்டங்களை நடத்தி, காந்தி பெயரிலான திட்டத்தை மீட்டு எடுக்கும் வரை ஓயப்போவதில்லை என்று அறுதியிட்டு கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved