Also Watch
Read this
கரூரில், லாரி மீது கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்த கார்
கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் அவரது 8 மாத கர்ப்பிணி மனைவி ஜனனி ஆகியோர், தங்களது 3 வயது பெண் குழந்தையுடன் பெங்களூரில் இருந்து காரில் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். காலை 6:30 மணி அளவில், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈசநத்தம் பிரிவு ரோடு அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலையைக் கடப்பதற்காகப் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனம் ஒன்று திடீரென சாலையைக் கடந்துள்ளது.

இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, காரை ஓட்டி வந்த ஓட்டுநர் இடதுபுறமாக காரைத் திருப்பியுள்ளார். எதிர்பாராதவிதமாக, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மோதி விபத்துக்கு உள்ளானது.

கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்
இந்த கோர விபத்தில், காரின் முன் பகுதி லாரியின் அடியில் சிக்கி சிதைந்தது. இதில், காரில் பயணித்த 30 வயதான அரவிந்த், அவரது மனைவி 27 வயதான ஜனனி மற்றும் காரின் ஓட்டுநர் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த ஜனனி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். காரில் இருந்த 3 வயது பெண் குழந்தை மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டித்துரை ஆகிய இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved