Also Watch
Read this
கிருஷ்ணகிரி அருகே முகமூடி அணிந்த டிரவுசர் கொள்ளையர், இரவுநேரத்தில் ஆயுதங்களுடன் சுற்றத்திரியும் சிசிடிவி காட்சியால் அங்குள்ள மக்கள் தூக்கம்கெட்டு உள்ளனர். தெரு நாய்களை உண்டிகோலால் கல்லால் அடித்து விரட்டிய டிரவுசர் கொள்ளையர் ஒருகட்டத்தில் அவைகள் குரைத்துக் கொண்டே விரட்டுவதை சமாளிக்க முடியாமல் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

சிசிடிவி பதிவால் அதிர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பிருந்தாவன் நகரில் கடந்த 28ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் மக்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. ஆனாலும், நாய்கள் தங்களுக்குள் சண்டைபோட்டு குரைத்து கொண்டிருக்கும் என நினைத்த மக்கள் யாரும் இரவில் வெளியே வந்து பார்க்கவில்லை. விடிந்ததும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

காவல் நிலையத்தில் புகார்

குறிப்பாக, வெளிப்பக்கமாக பூட்டு போடப்பட்டிருக்கும் வீடுகளை குறிவைத்துதான் அந்த கும்பல் சென்றது தெரியவந்தது. இதுமட்டுமல்லாது, குரைத்த தெருநாய்கள் மீது உண்டிகோலால் கல்லைக்கொண்டு அடித்து விரட்டும் அந்த டிரவுசர் கொள்ளையர் பல்வேறு தெருக்களில் சுற்றி திரிந்துள்ளனர். இதுகுறித்து, அங்குள்ள மக்கள் சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் ஒசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

டிரவுசர் கொள்ளையர் யார்?
உண்டிகோல் கல்லடிக்கு கட்டுப்படாத தெருநாய்கள், கூட்டமாக சேர்ந்து குரைத்தபடியே டிரவுசர் கொள்ளையர்களை குறிவைத்து விரட்ட, அவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இரவுநேரத்தில் கூட்டமாக வந்த கொள்ளை கும்பல் உள்ளூரை சேர்ந்தவர்களா? அல்லது வெளியூரை சேர்ந்தவர்களா? பவாரியா கொள்ளை கும்பலா?

இதற்கு முன்பு இதே கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இதுஒருபுறமிருக்க, இரவுநேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved