Also Watch
Read this
மேகமலை மற்றும் வருஷநாடு மலை கிராம மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி, வெளியேற்ற வனத்துறை நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக தேனியில் மக்கள் போராட்டம் வெடித்திருக்கிறது. தங்களை கொன்றாலும், தாங்கள் வாழ்ந்த மண்ணை விட்டு வெளியேற மாட்டோம், என ஆவேசத்தோடு வீதியில் இறங்கிய 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வனத்துறை நோட்டீஸ், கொந்தளிப்பு
ஆண்டாண்டு காலமாய் தங்களின் வியர்வையையும், ரத்தத்தையும் இந்த செம்மண்ணில் சிந்தி, அடர்ந்த காட்டுக்குள்ளே சொந்த உழைப்பால் வாழ்க்கையை செதுக்கிய மேகமலை, வருஷநாடு மக்களின் வாழ்க்கை இன்றைக்கு தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாய் நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
ஆக்கிரமிப்பாளர்கள் என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி, தலைமுறை தலைமுறையாக இந்த மலையையே தாயாக நினைத்து வாழ்ந்து வரும் மக்களை, வீட்டைவிட்டு வெளியேற வனத்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது, அப்பகுதி மக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

முற்றுகை போராட்டம்
இந்த சூழலில் தான், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகமே ஒரு மக்கள் வெள்ளமாய் உருவெடுத்தது. கையில் குழந்தைகளுடன், சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் என 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலை கிராம மக்களும், விவசாயிகளும் குடும்பம் குடும்பமாக திரண்டு முற்றுகை போராட்டத்தில் களமிறங்கினார்கள்.

அனைத்து கட்சிகளும்...
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைத்த இந்த பிரம்மாண்ட போராட்டத்தில், அரசியல் எல்லைகளை கடந்து அனைத்து கட்சிகளும் தோள் கொடுத்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் ஆகியோருடன் அதிமுக, தவெக, காங்கிரஸ் என பலதரப்பட்ட அரசியல் இயக்கங்களும் கை கோர்த்து, மக்களின் வாழ்வுரிமைக்காக குரலை உயர்த்தின. ’எங்கள் மக்களை வெளியேற்றாதே, வாழ்வுரிமையை பறிக்காதே’ என்ற முழக்கங்கள் தேனி நகரையே அதிர வைத்தன.

குவிந்த போலீசார்...
போராட்டத்தின் உச்சகட்ட பரபரப்பால், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தென்மண்டல ஐ.ஜி. விஜேந்திர பிதரி தலைமை தாங்க, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆட்சியரக பகுதியே ஒரு போர்க்களம் போல காட்சியளிக்க, வாகன போக்குவரத்தும் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டது.

மலை கிராமவாசிகள் வேதனை
போராட்ட களத்தில் இருந்த மலை கிராமவாசி ஒருவரிடம் பேசியபோது, தொண்டை அடைக்க அவர் பகிர்ந்த வார்த்தைகள் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. ’ஐயா... நாங்க ஏதோ நேத்து வந்து குடியேறுன ஆளுங்க இல்லை, எங்க பாட்டன், பூட்டன் காலத்துல இருந்து இந்த மலைய நம்பிதான் வாழ்க்கைய ஓட்டுறோம். விவசாயத்த விட்டுட்டா எங்களுக்கு வேற எதுவும் தெரியாது. இந்த மண்ணை விட்டு எங்களை விரட்ட நினைச்சா, நாங்க வெளிய போக மாட்டோம், இந்த மண்ணுலேயே உயிரை தியாகம் பண்ணுவோம்,’ என்று வேதனையுடன் புலம்பினார்.

வெளியேற மாட்டோம்...
எங்களை இந்த இடத்தை விட்டு வெளியேறச் சொன்னால் நாங்கள் எப்படி பள்ளிக்குச் செல்வோம்? எங்களது பெற்றோர் ஆடு, மாடுகளை மேய்த்துத்தான் தங்களின் வாழ்வாதாரத்தையும் படிப்பையும் காப்பாற்றி வருகிறார்கள் எனப் பள்ளி மாணவி ஒருவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பெண்கள், தங்களை இந்த மண்ணை விட்டு வெளியேற்றினால் நாங்கள் வேறு எங்கே போவோம்? தங்களை கொன்றாலும் இந்த இடத்தை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டோம் எனத் தனது வேதனையை ஆத்திரத்துடன் வெளிப்படுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் உறுதி
போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், தமிழக அரசு வனத்துறை நடவடிக்கைக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதாக அறிவித்திருப்பது மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளதாகவும், இந்த மறுசீராய்வு மனு மீது இறுதி முடிவு வரும் வரை பொதுமக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிரந்தர தீர்வு
சுவாசிக்கும் காற்றையும், காலடியில் இருக்கும் மண்ணையும் தவிர வேறு எதுவும் அறியாத இந்த விளிம்பு நிலை மக்களை தெருவில் நிறுத்துவது எந்த வகையில் நியாயம்? தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த மண்ணை விட்டு துரத்தப்படும் அச்சுறுத்தலில் தவிக்கும் இந்த மக்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் அடிப்படை வாழ்வுரிமையையும் காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக நிரந்த தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved