Also Watch
Read this
முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அனிதா ராதாகிருஷ்ணனை தொடர்ந்து மற்றுமொரு திமுக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது.

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ
விடிந்தும் விடியாமலும் போலீசார், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. வீட்டின் கதவுகளை தட்டுவதற்கு காரணமானது அவதூறு பேச்சு தான்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதோடு மட்டுமின்றி அவருக்கு மிரட்டல் விடுத்தும் ஏக வசனத்தில் வார்த்தைகளை விட்டதுதான் இப்போது வினையாக மாறியிருக்கிறது.

எம்.எல்.ஏ.வின் பேச்சை மேடையில் இருந்தவர்களே ரசிக்காத நிலையில், தவெகவினர் எப்படி அமைதியாக இருப்பார்கள்? அப்படி அவர்கள் அளித்த புகாரின் பேரில்தான், எம்.எல்.ஏ. மீது இரு பிரிவினருக்கு இடையே மோதலை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, கடுமையான மிரட்டல் விடுப்பது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கைது வாரண்ட் உடன்...
இந்நிலையில், இன்று ஜூலை20ஆம் தேதி காலை மார்க்கண்டேயனின் வீட்டிற்கு பெரும் படையுடன் வந்த காவல் துறையினர், கைது வாரண்டுடன் எம்.எல்.ஏ. தரப்புக்கு அதிர்ச்சி தந்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத கட்சியினர், போலீசை உள்ளே அனுமதிக்காமல் வெளியிலேயே காக்க வைத்தனர். போலீசார் வீட்டிற்குள் செல்வதற்குள் தகவல் தீயாய் பரவி கூட்டத்தை கூட்ட வைத்தது. எம்.எல்.ஏ.வின் இசைவை தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற போலீசார், முதல் தகவல் அறிக்கை விவரங்களை அளித்து கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறு கோரினர்.

ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்
இதை ஏற்காத மார்க்கண்டேயன், சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி தேவை. அவர் அனுமதி அளித்தாரா? என ரூல்ஸ் பேசிய நிலையில், உங்கள் மரியாதையை நீங்களே குறைத்துக் கொள்ள வேண்டாம் என பெண் போலீஸ் கேட்டுக் கொண்டதால், அங்கிருந்தவர்கள் ஆத்திரமடைந்து கூச்சலிட்டனர்.ஒருவழியாக எம்.எல்.ஏ.வை வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்த போலீசார் அவரை ஜீப்பில் ஏற்றிய நிலையில், ஆதரவாளர்கள் அனைவரும் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

படாத பாடு பட்டு கைது செய்தவரை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்ல விடாமல் தடுத்தவர்களை போலீசார் இழுத்து சென்று அப்புறப்படுத்தினர். ’தவெக அரசு ஒழிக, டிவிகேவின் ஏவல்துறை, காவல்துறை அராஜகம் ஒழிக’ போன்ற கோஷங்களுக்கு மத்தியில், காவல்துறை வாகனம் எஸ்பி அலுவலகத்தை நோக்கி சென்றது.

தீவிர விசாரணை
முன்கூட்டியே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பேரிகார்டுகள் வைக்கப்பட்டிருந்ததால், மார்க்கண்டேயனை பின் தொடர்ந்து வந்த திமுகவினர் உள்ளே அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கேயே மீண்டும் கண்டன முழக்கமிட்டவர்கள், எம்.எல்.ஏ.வுக்கு BP, சுகர் இருப்பதால் மாத்திரைகளை கொடுக்க வேண்டும் என கேட்டதால், ஒருவர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டார்.

இரண்டாவது முறையாக...
மற்றவர்கள் தங்கள் கோஷங்களை தொடர்ந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள அறையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை அழைத்துச் சென்ற க்யூ பிரிவு போலீசார், அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தவெக ஆட்சி அமைந்த பின் திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறை என்பதால் அக்கட்சியினர் கொந்தளித்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் வருகை
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனை சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்திருந்த நிலையில், அவர்கள் உள்ளே செல்ல போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை பதற்றமடைந்ததால் திமுக ஆதரவாளர்களை மட்டும் போலீசார் கைது செய்தனர். இருப்பினும், முன்னாள் அமைச்சர்களுக்கும் போலீசாருக்கும் இடையேயான வாக்குவாதம் ஓயாமல் நீண்டதால் பரபரப்பான சூழலே நீடித்தது.

திமுக நிர்வாகிகள் கைது
இதுதொடர்பாக பேசிய கீதா ஜீவன், ஜனநாயகம் காலில் போட்டு நசுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ மீது வழக்குக் கூட பதியாத இந்த அரசு, திமுக எம்.எல்.ஏக்கள் மீது அடக்குமுறையை ஏவுவதாக புகார் கூறினார். பின்னர் கீதா ஜீவன் உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.