கடையில் திருட்டு : திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி அருகே அய்யாபட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (36) என்பவர் திண்டுக்கல் சாலையில் விவசாய உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 7 மணியளவில் கடையை பூட்டிவிட்டு சென்ற அவர், இன்று காலை கடைக்கு வந்தபோது, ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.30,000 ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது. இதையடுத்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த அவர், அதிகாலை 3 மணியளவில் கருப்பு முழுக்கை சட்டை, சாம்பல் நிற பேண்ட் அணிந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்து, கல்லாவில் இருந்த பணத்தைத் திருடிச் செல்வதைப் பார்த்து அதிர்ந்தார். இது குறித்து சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அருகிலுள்ள மேலும் 3 கடைகளில் இதேபோல் பூட்டு மற்றும் ஷட்டர்களை உடைத்து திருட முயற்சி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தொடர் திருட்டு சம்பவங்கள் குறித்து சாணார்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருடனைப் பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Related Link நீதிமன்ற உத்தரவின் பேரில் சுடுகாட்டின் சுற்றுச்சுவர் இடிப்பு