Also Watch
Read this
Posted on: Mar 28, 2026 07:07 AM
சென்னை அருகே மதுரவாயலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தனியார் ஏஜென்சி வாகனத்தில் கொண்டு வரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிக்கியது ரூ.5 கோடி
வானகரம் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5 கோடியை பறிமுதல் செய்து, பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர். தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.5 கோடி பறிமுதல்
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வானகரம் - அம்பத்தூர் சர்வீஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த வாகனத்தை சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் ரூ.5 கோடி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

டாஸ்மாக் வசூல் பணம்
முதற்கட்ட விசாரணையில், வாகனத்தில் வைத்திருந்த பணம் டாஸ்மாக் கடைகளிலிருந்து கொண்டு வரப்பட்ட கலெக்சன் பணம் என தெரிய வந்தது. என்றாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து உள்ளனர். இது குறித்து வருமானவரித் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக வருமானவரித்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பணம் குறித்து விசாரித்து வருகின்றனர். உரிய ஆவணங்களை காண்பித்தால் ரூ.5 கோடி திருப்பி கொடுக்கப்படும், இல்லையென்றால் பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved