Also Watch
Read this
தமிழக தொழில் துறை அமைச்சர், செயலாளரை லண்டன் அழைத்து செல்லாதது ஏன்? என முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். இடைத்தேர்தலில், பா.ம.க.விரைவில் ஆதரவு தெரிவிக்குமென நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு, 5 முனை போட்டி நிலவும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றும் இபிஎஸ் உறுதி கூறினார்.

மதுரையில் எடப்பாடி பழனிசாமி...
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;
தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக சென்ற முதல்வர், தொழில் துறை அமைச்சர், அவரது செயலாளரை அழைத்துச் செல்லவில்லை. அவர்களை அழைத்துச் சென்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால், சம்பந்தமில்லாத அதிகாரிகளை அழைத்துச் சென்று முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக, செய்தி வந்துள்ளது. இந்தியாவில் அலுவலகம் இருக்கும்போது, லண்டனுக்கு சென்று புரிந்துணர்வு ஒப்பந்தம்
போட்டது ஏன்? தொழில் முதலீடை ஈர்க்க சென்றுள்ளாரா? இன்ப சுற்றுலா சென்றுள்ளாரா? என மக்கள் கேட்கும் அளவில் உள்ளது.

எள்ளி நகையாடும் அளவுக்கு...
மானிய கோரிக்கை விவாதத்தின் போது, சொந்த பிரச்சனையை தான் பார்க்க முடிந்தது. மக்கள் பிரச்சனை குறித்து எதுவும் பேசவில்லை. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் சட்டமன்ற நிகழ்வு நடைபெற்றது. முதல் மூன்று மணி நேரம் தான் மக்கள் பிரச்சினையை பேசினார்கள். மற்ற ஏழு மணி நேரம் சொந்த பிரச்சனையை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மேல் குற்றசாட்டு வைப்பதும் எதிர்க்கட்சி அதற்கு பதிலடி கொடுப்பதும் என, சட்டசபையின் நேரத்தை வீணடித்தனர். ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெறவில்லை. மக்கள் எள்ளி நகையாடும் அளவிற்கு சட்டமன்ற நிகழ்வு நடந்து உள்ளது. சினிமாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளை போல் தான் சட்டமன்றத்தை மக்கள் பார்த்தார்கள்.

கடும் மின்வெட்டு
தமிழகத்தில், கடுமையான மின்வெட்டு இருக்கிறது. ஆனால், அமைச்சரை கேட்டால் மின்வெட்டு இல்லை என்கிறார். ஆனால் அவர்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் திருமாவளவன், கம்யூனிஸ்ட் சண்முகம் கலந்து கொண்ட கூட்டத்தில், வருவாய்த்துறை அமைச்சர் பேட்டி கொடுக்கும்போது மின்வெட்டு ஏற்பட்டது.

அமைச்சர் மின்வெட்டு இல்லை என்று இன்னும் மறைப்பது அர்த்தமில்லை. ஆக்கப்பூர்வமான விளக்கம் வேண்டும். மின் பற்றாக்குறை இருப்பதாகவும் அதை ஈடு செய்ய 2000 மெகா வாட் மின்சாரம் வெளியில் இருந்து வாங்குவதாக குறிப்பிட்டு இருக்கிறார். மின் வெட்டு இல்லை என்றால் எதற்காக வெளி சந்தையில் இருந்து வாங்க வேண்டும். தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது எதார்த்தமான நிலை. இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதும் மக்கள் தூக்கத்தை தொலைத்ததற்கும் காரணம் தமிழக அரசு. அரசு இனிமேலாவது விழித்துக் கொண்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும்.

புதிய தலைமைச்செயலகம் எதற்கு?
தமிழகத்தின் கடன் அதிகரித்துள்ளது, இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது 40,000 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இப்படி இருக்கும் போது புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? நிதிநிலையை சரி செய்த பிறகு புதிய தலைமை செயலகம் கட்டலாம். தலைமைச் செயலகத்தை மாற்றுவதில் மாற்று கருத்து இல்லை. இடத்தை தேர்வு செய்யும் போது மீனவர்களுக்கு பாதிப்பில்லாத, போக்குவரத்து நெரிசல் இல்லாத நல்ல இடத்தை தேர்வு செய்து தலைமைச் செயலகம் கட்டினால் பரவாயில்லை.

அதிக ஊழல்
தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பிறகும் கொள்ளை, கொ*, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. அந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு பிறகு தான் அதிக ஊழல் நடைபெற்று உள்ளது. முன்பு கொடுத்ததை வாங்கினார்கள், இப்போது டிமாண்ட் செய்து வாங்குகிறார்கள். இந்த ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றியதாக தகவல் வருகிறது. அப்படி என்றால் ஊழல் நடைபெறுகிறது என்றுதானே
அர்த்தம்.

பாமக ஆதரவு
இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் நாங்களும் திமுகவும் போட்டியில் இருக்கிறோம். அப்படி இருக்கும்போது எப்படி கள்ள உறவு என்று சொல்ல முடியும். இரண்டு இடைத்தேர்தலும் திணிக்கப்பட்ட தேர்தல் என்று தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வர துணை நின்ற கட்சிகளே சொல்கிறது. குதிரை பேரம் மூலமாக விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வைத்து, மீண்டும் தேர்தலில் போட்டியிட வைக்கிறார்கள்.

மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த தேர்தல் மூலமாக தமிழக வெற்றி கழகத்திற்கு, மக்கள் பாடத்தை வழங்குவார்கள்.
சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாமக ஆதரவு தருவார்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved