Also Watch
Read this
தமிழக சட்டசபையில் மாற்று சபாநாயகராக, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து எம்.எல்.ஏ. சத்தியபாமா சபையை வழி நடத்தினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
தமிழக சட்டசபை கூட்டத்தை, சட்டசபை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகராக ரவி சங்கர் வழி நடத்தி வருகின்றனர். இன்று சட்டசபை ‘மாற்று தலைவராக’ சத்தியபாமா எம்.எல்.ஏ. வழிநடத்தினார். அப்போது திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிக் கொண்டிருந்த நிலையில், ‘மாற்று சபாநாயகர்’ சத்தியபாமா குறுக்கிட்டு, “15 நிமிடம் ஆகிவிட்டது, விரைவாக முடித்தால் நன்றாக இருக்கும், நன்றி” என்றார்.

மாற்று சபாநாயகர்
இதனையடுத்து, அமைச்சர் ஸ்ரீநாத் பதில் சொல்வதற்காக எழுந்து, “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,” என்றார்.

அப்போது குறுக்கிட்டு, “மாற்று பேரவைத் தலைவர்” என குறிப்பிடுமாறு சத்தியபாமா சுட்டிக்காட்டினார்.

தங்கம் தென்னரசு பாராட்டு
திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எழுந்து, ’மாண்புமிகு ‘மாற்று பேரவைத் தலைவர் அவர்களே. லேடி வெல்லிங்டன் இந்த சட்டப்பேரவைக்கு வழங்கிய ஆசனத்தில் ஒரு பெண்மணி, இங்கே பேரவைத் தலைவராக அமர வேண்டும் என்பது நீண்ட காலமாக எல்லோரிடத்திலும் இருக்கக்கூடிய எதிர்பார்ப்பு. இன்றைக்கு மாற்று தலைவராக நீங்கள் அந்த இருக்கையிலே அமர்ந்திருப்பதை பார்க்கிற போது, உள்ளபடியே பேரவை உறுப்பினர்கள் அனைவரும் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் மகிழ்ச்சியை வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்,” என கூறினார்.

நன்றி தெரிவித்த சத்யபாமா
இதனையடுத்து, “மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறிய சத்தியபாமா, அனிதா ராதாகிருஷ்ணனை சுருக்கமாக பேசி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, “18 நிமிடமாகிவிட்டது, இன்னும் 9 பேர் பேச இருக்கின்றனர். கொஞ்சம் சீக்கிரமா முடிக்க வேண்டும்,” என வேண்டுகோள் விடுத்தார்.

சபாநாயகர் பாராட்டு
இதனையடுத்து, எம்.எஸ்.ரவி எம்.எல்.ஏ.வை பேச மாற்று பேரவைத் தலைவர் சத்யபாமா அழைத்த போது, பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அவர் அருகே நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்ததும் சபாநாயகர் இருக்கையில் இருந்து எழுந்து சென்றார் சத்தியபாமா. தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், ”மாண்புமிகு தற்காலிக அவைத் தலைவராக இருந்த சகோதரி, சபையை மிக சிறப்பாக நடத்திக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதுபோல தற்காலிக பொறுப்பு வழங்குவதன் மூலமாக பலருக்கும் தங்களை தகுதிப்படுத்தி கொள்ளும் வாய்ப்பு மற்ற உறுப்பினர்கள் பாராட்டைப் பெறும் வாய்ப்பும் கிடைக்கும். இதற்காக அவரை அனுமதித்தேன். அவையை ரொம்ப சிறப்பாக நடத்தினார். அதனால் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,” என்றார்.

அதிமுகவில் இருந்து செங்கோட்டையனுடன்...
2014 மக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர் சத்தியபாமா. அந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவியது. அதிமுகவின் சத்தியபாமா, தேமுதிகவின் தினேஷ்குமார், திமுகவின் செந்தில்நாதன், காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன் அத்தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் 1,79,315 வாக்குகள் வித்தியாசத்தில் சத்தியபாமா வென்றார்.

திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விலகிய போது சத்தியபாமாவும் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். 2026 சட்டசபை தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு 69,992 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சத்தியபாமா எம்ஏல்ஏ ஆனார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved