Also Watch
Read this
By: Manigandan Raja

உயிர் நீத்த வீரர்களுக்கு நினைவு தினம் அனுசரிப்பு :
ஈரான் மற்றும் லெபனான் உடனான போர் காரணமாக உயிர் நீத்த வீரர்களுக்கு இஸ்ரேலில் நாடு தழுவிய நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஜெருசலேமில் சைரன் ஒலிக்கு மத்தியில் அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் ராணுவ தளபதி உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
போர் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் முடங்கிய சுற்றுலா :
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் எதிரொலியாக தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால் அங்குள்ள சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வளைகுடா நாடுகளை சேர்ந்தவர்களின் வருகை குறைந்துள்ளதால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா வழிகாட்டி வேதனையுடன் கூறினார்.
ஈரான் கொடியுடன் பயணித்த சரக்கு கப்பலை தடுத்த அமெரிக்கா :
ஈரான் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பலை அமெரிக்கா வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தியது குறித்து சீனா கவலை தெரிவித்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை பொறுப்புணர்வுடன் கடைபிடிக்க வேண்டும் என்றும், ஹோர்முஸ் நீரிணை வழியாக இயல்பான போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும் எனவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின் ரபியா எல்லை திறப்பு :

ஈரான் போரின் காரணமாக கடல் வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தரை வழி போக்குவரத்தின் மூலம் எண்ணெய் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஈராக் அரசு ரபியா ((Rabia border)) எல்லையை மீண்டும் திறந்துள்ளது. சிரியா வழியாக தரை வழி போக்குவரத்தின் மூலம் எண்ணெய் ஏற்றுமதிக்கு ஈராக் திட்டமிட்டுள்ளது.
ஈரானின் சட்டப்பூர்வ மருத்துவ அமைப்பு தகவல் :
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போரில் 3 ஆயிரத்து 375 பேர் உயிரிழந்ததாக ஈரானின் சட்டப்பூர்வ மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியிருந்தது.
அமெரிக்கா முன்மொழிந்த ஒப்பந்தத்தை ஏற்க ஈரான் மறுப்பு :

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் செல்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஈரான் அரசு அறிவித்துள்ளது. இரண்டு வார கால போர் நிறுத்தம் வரும் 22ஆம் தேதியுடன் முடிவடையும் சூழலில், இறுதி வாய்ப்பாக அமெரிக்க குழு நியாயமான ஒப்பந்தத்துடன் பாகிஸ்தான் செல்ல இருப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், அதனை ஏற்க ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் மக்கள் டிரம்ப் உருவ பொம்மையை எரித்து போராட்டம் :
பிலிப்பைன்சும் அமெரிக்காவும் இணைந்து நடத்தும் ராணுவக் கூட்டுப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் மக்கள், தலைநகர் மணிலாவில் டிரம்ப் உருவபொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கூட்டுப்பயிற்சிகள் பிலிப்பைன்சை அமெரிக்காவின் உலகளாவிய மோதல்களுக்குள் இழுத்துச் செல்லக்கூடும் என்று போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.
ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கியுள்ள 14 இந்திய சரக்கு கப்பல்கள் :

ஈரான்-அமெரிக்கா மோதல் காரணமாக ஹார்மூஸ் நீரிணை பகுதியில் சிக்கியுள்ள 14 இந்திய சரக்கு கப்பல்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஹோர்மூஸ் நீரிணை எந்த வித கட்டுப்பாடுமின்றி திறக்கப்படுவதாக அறிவித்த ஈரான், திடீரென்று மீண்டும் மூடியதால் இந்தியா உட்பட பல நாடுகளின் சரக்கு கப்பல்கள் சிக்கித் தவிக்கின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved