Also Watch
Read this
By: Manigandan Raja

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கோடை குறுவை சாகுபடியில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பல்வேறு பகுதிகளில் அறுவடை பணி என்பது நடைபெற்று வருகிறது.
விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்காக 167 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் குடவாசல் வலங்கைமான் மன்னார்குடி கொரடாச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அருகில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகள் மூலமாக கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படாத காரணத்தினால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 5 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக மன்னார்குடி வலங்கைமான் நீடாமங்கலம் குடவாசல் நன்னிலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் மூட்டைகள் தேக்கம் என்பது அதிகரித்து காணப்படுகிறது குறிப்பாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லானது லாரிகள் மூலம் ஏற்றப்படாமல் ஆங்காங்கே இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் தற்போது மற்ற விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தற்போது திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்தால் விவசாயிகள் தங்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக எடுத்து வந்த நெல் மணிகளை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து அதிக அளவிலான நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக லாரிகள் மூலம் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் விவசாயிகளின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved