Also Watch
Read this
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானத்தின் போது, திமுக, தவெக, காங்கிரஸ் கட்சிகளிடையே காரசார விவாதங்கள் நடைபெற்றன. மருத்துவக் கல்வி என்பது வியாபாரப் பண்டம் அல்ல, அது மனித உயிர்களை காக்கும் உன்னதமான சேவை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
மாநிலத்தின் கல்வி உரிமை, சமூக நீதி, லட்சக்கணக்கான கிராமப்புற மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான நீட் தேர்வு எதிர்ப்பு தனித் தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழியப்பட்டு, விரிவாக விவாதிக்கவும்பட்டது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வுக்கு எதிரான தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். ஒரு மாணவர் 12 ஆண்டுகள் பள்ளியில் கற்ற கல்வியை விட, ஒரே நாளில் நடைபெறும் ஒரு தேர்வு அவரது எதிர்காலத்தை தீர்மானிப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது என்றும், மருத்துவக் கல்வி என்பது வியாபாரம் அல்ல, அது மனித உயிர்களை காப்பாற்றும் உன்னதப் பணி எனவும் தெரிவித்தார். ஒரு தினக்கூலி தொழிலாளியின் குழந்தையோ, கழனியில் வேர்க்க விறுவிறுக்க உழைக்கும் விவசாயியின் குழந்தையோ அதே லட்சங்களை அள்ளிக்கொடுத்து கோச்சிங் போக முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சிகளும் ஆதரவு
இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில், ஆளுங்கட்சி மட்டுமன்றி எதிர்க்கட்சிகளும் தங்களது ஆதரவை ஒரே குரலில் பதிவு செய்தன. நீட் தொடர்பாக திமுக தரப்பில் இருந்து பேசிய உறுப்பினர் முத்துராஜாவின் சில கருத்துகள் ஆளுங்கட்சியினருக்கு கடும் கோபத்தை உண்டாகியது.

அதேபோல், காங்கிரஸ் சார்பில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், ராகுல் காந்தி பெயரை குறிப்பிட்ட போதும், திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அரசியல் பேசாமல்...
இதனால், அவையில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இது மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான தீர்மானம் என்பதால் அரசியல் பேசாமல் ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றித் தர கேட்டுக்கொண்டார். அதிமுக சார்பில் பேசிய ஓ.எஸ்.மணியன், 2011 முதல் 2016 வரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நீட் தேர்வுக்கு எதிராக நடத்திய சட்டப் போராட்டங்களையும், 2017ல் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தையும் சுட்டிக்காட்டி, தீர்மானத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.

பாமக ஆதரவு, பாஜக எதிர்ப்பு
2006லேயே நுழைவுத் தேர்வை ரத்து செய்ய கையெழுத்திட்டவர் அன்புமணி என சுட்டிக்காட்டி பேசிய பாமக எம்.எல்.ஏ. சௌமியா, நீட் கொடுமையால் தமிழ்நாட்டில் மட்டும் 50 மாணவர்கள் உயிரை மாய்த்திருப்பதாக தெரிவித்தார்.

தீர்மானத்தை எதிரத்துப் பேசிய பாஜக எம்எல்ஏ போஜராஜன், அரசே பயிற்சி மையம் நடத்தி நீட் தேர்வுக்கு ஊக்கப்படுத்தலாமே? என வாதிட, அவையில் கூச்சல் குழப்பம் வெடித்தது. இறுதியில், தீர்மானத்தை ஏற்க முடியாது எனக்கூறி பாஜகவின் ஒரேயொரு எம்.எல்.ஏ.வும் வெளிநடப்பு செய்தார்.

தீர்மானம் நிறைவேற்றம்
இது வெறும் அரசியல் சார்ந்த கோரிக்கை அல்ல, தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் மற்றும் சமூக நீதியை காப்பதற்கான மனிதநேய கோரிக்கை என்பதை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மீண்டும் ஒருமனதாக தெளிவுபடுத்தி உள்ளது. சட்டப்பேரவையில் 2021ல் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட முன்வடிவு இன்னும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில், இத்தகைய ஒருமித்த குரலை தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் பதிவு செய்திருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved