Also Watch
Read this
புதிய அரசின் திட்டங்களை தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன். தேடுவது எனக்காக அல்ல, மக்களுக்காக, என திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் பேசி உள்ளார்.
கஜானா காலி, கேள்விக்குறி
தமிழக சட்டப்பேரவையில் 3ஆவது நாளாக இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி, பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில், திமுக எம்எல்ஏவும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது;
சட்டப்பேரவை எத்தனையோ வித்தியாசமான சூழல்களைக் கண்டிருக்கிறது. ஆனால், இந்த அரசு ஏற்படுத்தியிருக்கும் சூழல் என்பது வித்தியாசத்திலும் வித்தியாசமானது. “செய்வதை மட்டும்தான் சொல்வோம்” என்று அள்ளித் தெளித்த, வாக்குறுதிகளைத் தாங்களும் மறந்து, மக்களும் மறந்திருப்பார்கள் என்று எண்ணித் தனது முதல் நிதிநிலை அறிக்கையையும், வேளாண் நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது தவெக அரசு. அதிலும் பெயர் மாற்றங்களுடன் வெளியான இந்த நிதிநிலை அறிக்கை, தேர்தலின் போது சொன்ன “கஜானா காலி” என்ற பிரச்சாரத்தைக் கேள்விக்குறியாக்கி விட்டது. இதைப் பார்த்து ஆச்சரியக்குறிகள் கூட விக்கித்து நிற்கும் சூழல் உருவாகி உள்ளது.

பட்ஜெட் ஏமாற்றத்தின் வடிவம்
இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் அரங்கேறிய காட்சிகளை திரும்பிப் பார்க்கிறேன். முதலமைச்சர், துறை ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டார். பட்ஜெட்டுக்கு முன்னதாக மீண்டும் ஆய்வு செய்தார்கள். அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளுக்கான செயல்திட்டம் உருவாக்கப்படும் என்று தகவல் வெளியானது. அதற்கு “வெற்றித் தமிழக திட்டங்கள்” என்றெல்லாம் அலங்காரமாகப் பெயர் சூட்டப்பட்டு அறிக்கைகளாகவும் வெளியானது. ஆனால், இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையோ ஏமாற்றத்தின் வடிவமாக உள்ளது.
தேடிக் கொண்டு இருக்கிறேன்
திரும்பும் பக்கமெல்லாம் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைத் திட்டங்கள் தான் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் மனதில் நிலை கொண்டுள்ள எங்கள் தலைவர் ஸ்டாலின் உருவாக்கிய திட்டங்கள் புது உருவம் கொண்டு நிற்கின்றன. இதில் புதிய அரசின் திட்டங்களை தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன். தேடுவது எனக்காக அல்ல, மக்களுக்காக, புதிய அரசு அமைந்திருக்கிறது, புதிய திட்டங்கள் வரும் என்று நம்பிய மக்களுக்காக.

ஏமாந்து நிற்கின்றனர்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெண்களின் வாழ்வாதாரத்திற்கும் சுயமரியாதைக்கும் துணை நின்ற திட்டம். ‘ஆயிரம் கைகள் நீட்டி ஆதவனை மறைக்கலாம்’ என்று கனவு காண்பது போல அத்திட்டத்திற்குப் பெயர் மாற்றம் கண்டிருக்கிறது. ஆனால், ஆளும் அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னது போல மகளிர் உரிமைத் தொகை உயரவில்லை. இனிப்பூட்டும் இன்பச் செய்தி வரும், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் வரும் என்று நம்பிய மகளிர், அது குறித்த அறிவிப்புகள் கூட வரவில்லை என்று ஏமாந்து நிற்கிறார்கள் பாவம்.

அனைத்திலும் ஏமாற்றம்
“கல்வி ஒன்றே யாராலும் திருட முடியாத சொத்து” என்பதை எல்லாத் தருணங்களிலும் எடுத்துக்கூறி, கல்விக்கும் மாணவர்களுக்கும் பொற்காலமாக விளங்கிய திராவிட மாடல் ஒளியில் இந்த அரசு நடைபோடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்கும் திட்டம், 15 ஆயிரம் ரூபாய் நிதி உதவி என்ற அறிவிப்புகளோ, அதற்கு உண்டான திட்டங்களோ இந்த பட்ஜெட்டில் காணவில்லை. நாடே திரும்பிப் பார்த்து பல்வேறு மாநிலங்களும் கைகொண்ட திட்டம் விடியல் பயணம். இதனை விரிவுபடுத்தி அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மாநிலம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தி சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள் என்று மகளிர் நம்பினர். ஆனால், அதிலும் ஏமாற்றம்.

வாக்களித்த மக்களுக்கு...
இந்தப் பேரவையில் நான் செய்யாமல் விட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளேன். நல்லதும் மாற்றம்தான், கேட்டதும் மாற்றம்தான். எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்குப் பெருத்த ஏமாற்றம்தான்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved