Also Watch
Read this
By: Manigandan Raja

அரியலூர் மாவட்டம். உடையார்பாளையம், பாப்பாத்தம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி விழாக் குழுவினர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, தற்போதெல்லாம் கரகாட்டம் ஆடும் பெண்களின் உடைகள் மிகவும் ஆபாசமாக உள்ளதாகவும், தமிழ்நாட்டை விட ஆந்திராவில் இன்னும் மோசமாக உள்ளதாகவும் குறிப்பிட்டு, இதை எப்படி அனுமதிப்பது என கேள்வி எழுப்பினார்.
காவல்துறை தரப்பில் ஆபாச நடனம் மட்டுமல்லாமல், அரசியல் ரீதியான கோசங்களையும் எழுப்ப வாய்ப்பு உள்ளதால் தான் அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.அதற்கு நீதிபதி, அரசியல் பேச உடையார்பாளையம் உட்பட நாடு முழுவதும் உரிமை உள்ளது. ஆனால், ஆபாச நடனத்துக்குத்தான் அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தபோது.

மனுதாரர் தரப்பில், கரகாட்டம் காலம் காலமாக கிராமங்களில் நடந்து வரும் கலை நிகழ்ச்சி; அதற்கு அனுமதி வழங்க வேண்டும்; பக்கத்து கிராமத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறி, அந்த உத்தரவு நகல் தாக்கல் செய்யப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இன்று தொடங்கவுள்ள உடையார்பாளையம் கோவில் திருவிழாவிலும் நிபந்தனையுடன் கரகாட்டத்துக்கு அனுமதி வழங்குவதாக உத்தரவிட்டார்.மேலும், கரகாட்டம் ஆடும் கலைஞர்கள் ஆபாசமாக உடை அணிந்து நடனம் ஆடினால் உடையார்பாளையம் காவல் நிலையத்தினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆபாசமாக ஆடியதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்; அதன் அடிப்படையில், தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்தும் உத்தரவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved