Also Watch
Read this
By: Fyrose Banu

திண்டுக்கல் குஜிலியம்பாறை தாலுகாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தொண்டர்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரப்பட்டுள்ளது.குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவு உடனடியாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியராக அய்யாசாமி என்பவர் உள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் வெளியிட்டதாக சுற்றறிக்கை ஒன்று பரவியது. அதில் குஜிலியம்பாறை வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இல்லையேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது, அந்த சுற்றறிக்கையில்,” திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர் முகவரி ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியரிடம் 18.08.2026 மாலைக்குள் நேரடியாக சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. அனைத்து கிராம உதவியாளர்களும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. அறிக்கை அளிக்க தவறும் கிராம உதவியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ” என கூறப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் இந்த சுற்றறிக்கை மாவட்ட ஆட்சியர், பழனி கோட்டாட்சியருக்கும் தகவலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த விவகாரத்துக்கு திண்டுக்கல் நாடாளுமன்ற சிபிஎம் உறுப்பினர் சச்சிதானந்தம், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். கைரேகை சட்டம் அமலில் இருந்த காலத்தில் கூட அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்ட காலத்தில் கூட இதுபோன்ற சுற்றறிக்கையை வட்டாட்சியர்கள் பிறப்பித்தது இல்லை. ஒரு தேசிய அரசியல் கட்சியின் விவரங்களை சேகரிக்க பகிரங்க சுற்றறிக்கை அனுப்பும் வானளாவிய அதிகாரம் குஜிலியம்பாறை வட்டாட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளதாக என கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் வட்டாட்சியர் இந்த சுற்றறிக்கை அனுப்ப காரணம் என்ன விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது. அதாவது பொதுமக்கள் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமியை சந்திக்க வாரத்தில் நான்கு நாட்கள் அதுவும் பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை மட்டுமே அனுமதி எனவும். மனு கொடுக்க வரும் பொதுமக்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என அச்சுறுத்தும் வகையில் பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும் மக்கள் பிரச்சினைக்காக வட்டாட்சியரை சந்திக்க சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதனை கண்டித்து வட்டாட்சியரை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட இருந்தனர். இது தொடர்பாக துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.

தனக்கு எதிராக போராட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்தே வட்டாட்சியர் தன்னிச்சையாக இந்த உத்தரவை பரப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் தமிழக அளவில் பேசுபொருளாக மாறிய நிலையில், வட்டாட்சியர் அய்யாசாமியை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பணியிட மாற்றம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்ட விளக்கத்தில், குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவு உடனடியாக திரும்பப் பெறப்படும் என தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved