Also Watch
Read this
By: Fyrose Banu

சிவகங்கை மாவட்டம் இளையங்குடி அருகேயுள்ள மேலநேட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், கணித ஆசிரியர் சரியாகப் பாடம் நடத்தவில்லை எனக் கூறிப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டுத் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலநேட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வரும் தெய்வேந்திரன் என்பவர், மாணவர்களுக்கு உரிய முறையில் பாடம் கற்பிப்பதில்லை எனத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள், இன்று காலை பள்ளிக்குத் திரண்டு வந்தனர். கணித ஆசிரியர் தெய்வேந்திரனை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து தரையில் அமர்ந்து திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்துப் பெற்றோருடன் போராட்டத்தில் இணைந்தனர். 
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க சம்பவ இடத்திற்கு 20-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மானாமதுரை வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் நேரில் வருகை தந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் போது, "மாணவர்களின் நலன் கருதி கணித ஆசிரியர் தெய்வேந்திரன் நாளை முதல் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்படுவார்" என வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் உறுதியளித்தார். அதிகாரிகளின் இந்த உறுதியான அறிவிப்பைத் தொடர்ந்து சமாதானமடைந்த
பெற்றோர்களும் மாணவர்களும் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அமைதியாகக் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved