Also Watch
Read this
By: Fyrose Banu

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி காமராஜ் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் முறையாக வழங்கப்படாமல் அவ்வப்போது மட்டுமே விநியோகம் செய்யப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த மூன்று நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று தருமபுரி, பெரியம்பட்டி நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரிமங்கலம் வட்டாட்சியர் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். குடிநீர் கோரி நடைபெற்ற சாலை மறியல் காரணமாக தருமபுரி நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved