Also Watch
Read this
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அருகே பலூனை ஊதி விளையாடும் போது எதிர்பாராவிதமாக தொண்டையில் சிக்கிக் கொண்டதில், 6 வயது சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கண் முன்னரே...
பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளை, கண் முன்னேயே மூச்சுத் திணறி துடிதுடித்து மாண்டு போன கோரத்தை பார்த்த எந்த தாயும், இப்படித்தான் பித்துபிடித்ததை போல் அரண்டு போயிருப்பாள். ஊரே கதறி அழும் வேளையிலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு மனம் நொந்து போயிருக்கும் காட்சி நெஞ்சை கணகணக்க வைக்கிறது.

பலூன் வைத்து விளையாட்டு
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த பச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் குமார் - சத்யா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் என ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் சோம்நாத், சேஸ்நாத் ஆகிய 6 வயதான இரட்டை குழந்தைகள் வீட்டில் பலூன் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சோம்நாத் ஒரு பலூனை ஊதிய வேகத்தில் மூச்சை பின் இழுத்த போது, கையிலிருந்து நழுவிய பலூன் தொண்டைக்குள் சென்று சிக்கி இருக்கிறது.

இதனை சேஸ்நாத் அம்மாவிடம் சென்று கூறிய நிலையில், அவர்களும் தங்களுக்கு தெரிந்த வழிகளில் எல்லாம் பலூனை எடுக்க முயற்சித்து பார்த்தனர். ஆனால், அடுத்த சில வினாடிகளிலேயே சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டு திணறி மூர்ச்சையானதால், பயந்து போன பெற்றோர் பதறியடித்துக் கொண்டு சிறுவனை தூக்கிக் கொண்டு நாட்றாம்பள்ளி மருத்துவமனைக்கு சென்றிருக்கின்றனர்.

கவனம் தேவை...
சிறுவனை உடனடியாக ஐசியுவில் சேர்த்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறி பெற்றோர் தலையில் இடியை இறக்கி இருக்கின்றனர். அங்கேயே சிறுவனின் தாய் வெடித்து அழ, மருத்துவமனை முழுவதும் சோகம் ஆட்கொண்டது. இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர், பிள்ளைகளின் நடவடிக்கைகளையும் அவர்களின் செயல்களையும் தீவிரமாக கண்காணிப்பதோடு மிகுந்த கவனத்தோடு அவர்களை கையாள வேண்டும் என்பதையே இந்த மரணச் சம்பவம் நமக்கு உரைக்கின்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved