Also Watch
Read this
டிவி சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என காட்டுவதுபோல், சட்டப்பேரவையில் முதலமைச்சருக்கு பதில் அமைச்சர்கள் பேசிக் கொண்டிருப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலடித்தார். அதற்கு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் ஆக்ரோஷமாக பதில் சொல்லிக் கொண்டிருக்க, திடீரென எழுந்த முதலமைச்சர் விஜய், வரும் திங்கட்கிழமை பதிலுரையின்போது எதிர்க்கட்சியினரை ஓடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என சபாநாயகரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கிளம்பி செல்ல அவையே கலகலப்பானது.

தமிழக சட்டசபையில்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில், முதலமைச்சர் விஜய்யின் துறைகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, தான் எழுப்புகின்ற கேள்விகளுக்கு டைவர்சன் அல்லது பழிபோடும் டேக்டிக்ஸ் (Tactics) இல்லாமல் முதலமைச்சர் பதிலளிப்பார் என நம்புவதாக கூறி பேச்சை தொடங்கிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, திமுக ஆட்சியில் டாப் கியரில் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு,

தவெக ஆட்சியில் ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருப்பதாகவும், தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் உட்பட தவெக கொண்டு வந்துள்ள அனைத்து திட்டங்களுக்கும் ’காதுகுத்து திட்டம்’ என கொண்டு வந்திருக்கலாம் எனவும் விமர்சனம் செய்தார். அத்தோடு ஆணவக்கொ*கள் என்ற வார்த்தை தவெக ஆட்சியில் காதல் மரணங்களாக மாறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

அமைச்சர் ஆனந்த் ஆவேசம்
அப்போது, ஆவேசமாக குறுக்கிட்ட அமைச்சர் ஆனந்த், தவெக எம்எல்ஏ மீதான பாலியல் வன்கொடுமை புகாரில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்ப்பதே கிடையாது எனவும் கூறினார்.

செங்கோட்டையன் விளக்கம்
அதற்கு, தான் பேசுவது காவல்துறை மீதான விவாதம்தானே? நீர்வளத்துறையோ பொதுப்பணித்துறையோ இல்லையே என உதயநிதி கேள்வி எழுப்ப, எந்த துறையாக இருந்தாலும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டியது கூட்டுப்பொறுப்பு தான் என அவை முன்னவர் செங்கோட்டையன் பதிலளித்தார். மேலும், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவும் நிறையமுறை குறுக்கமறுக்க பேசி உள்ளார், அப்போதெல்லாம் நாங்கள் இடைமறித்தோமா? என கோபமாக மைக்கை கீழே சாய்த்தார்.

ரத்தம், தக்காளி சட்னி...
அப்போது, பெண்களுக்கு எதிராக ஆளுங்கட்சியினர் செய்த குற்றங்களுக்கு பெரிய லிஸ்டே உள்ளதாக பேசிய உதயநிதி, முதலமைச்சரை விமர்சித்த பாஜக தலைவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையுமே இல்லை எனவும் எங்களுக்கு வந்தால் ரத்தம் அவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என கேள்வி எழுப்பினார்.

இவருக்கு பதில் இவர்
மேலும், உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டுப்போட்ட ஒரே அரசு தவெகதான் எனவும் தாங்கள் கேட்கும் எந்த கேள்விகளுக்கும் முதலமைச்சர் வாய் திறந்து பதில் சொன்னதே இல்லை எனவும் குற்றம் சாட்டிய உதயநிதி, ”சீரியலில் இவருக்கு பதில் இவர்” என வருவது போன்றுதான் தற்போது சட்டமன்றத்திலும் முதலமைச்சருக்கு பதில் அமைச்சர்கள் பதில் சொல்லிக் கொண்டிருப்பதாக விமர்சனம் செய்தார்.

திமுக தான் ஆட்சி செய்கிறது
முதலமைச்சரின் பதிலுரைக்கு 3 நாட்கள் உள்ளது நன்கு தயார் செய்து கொள்ளவும் என உதயநிதிகூற தவெகவினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கூலாக உதயநிதி தண்ணீர் குடிக்க, முதலமைச்சர் அத்தனையையும் கூர்ந்து கவனிப்பதாகவும், திங்கட்கிழமை பதில் சொல்வதாகவும் சபாநாயகர் கூறினார்.

அப்போது, தனது கிண்டல்தொனியில் இருந்து பின்வாங்காத உதயநிதி, தான் தமிழில் கூறியதைதான் நீங்கள் ஆங்கிலத்தில் கூறுகிறீர்கள் என சொல்லி சபாநாயகரையே குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்ததோடு, இன்னும் திமுகதான் ஆட்சி செய்கிறது என்பதை மனதில் இருந்து அழித்துவிடுங்கள் எனக்கூறினார்.

மாறாமல் பதிவு...
உதயநிதியின் குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர் ஆதவ், முதலமைச்சர் தயார் நிலையில் இருந்ததால்தான் ஆளுங்கட்சியாக தவெகவும், எதிர்க்கட்சியாக திமுகவும் உள்ளதாக கூறியதோடு திமுக ஆட்சியில் கொ*களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மாறாமல் பதிவானது எப்படி? என கேள்வி எழுப்பினார்.

முதல்வர் பேச்சு, கை தட்டல்
இப்படி காரசார விவாதங்களும், கேள்விக் கணைகளும் அவையில் நடந்து கொண்டிருக்க, திடீரென எழுந்த முதலமைச்சர் விஜய், அத்தனை கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் சொல்ல நான் தயார், ஆனால் எதிர்க்கட்சியினர் ஓடாமல் இருக்க வேண்டும், அதற்கு சபாநாயகர்தான் பொறுப்பு எனக்கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது. கூடவே கைதட்டல்களும் பறந்தன.

அதற்கும் அசராத உதயநிதி, கடைசியாக யார் ஓடிப்போனது என்பதை அவையே பார்த்திருக்கும் எனவும் பதிலளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved