Also Watch
Read this
திமுகவில் கட்சி ரீதியான கட்டமைப்பை ஸ்ட்ராங் ஆக்க தீவிரமாக பணிகள் நடந்து வரும் நிலையில், மாவட்ட செயலாளரை மட்டும் தவிர்த்து உட்கட்சி தேர்தலை நடத்துங்கள் என மூத்த நிர்வாகிகள் ஒருபக்கம் கொடி பிடிக்க, ஒட்டுமொத்த தேர்தலையும் ஒன்றாக நடத்துவதுதான் நல்லது என கனிமொழியும் மறுபக்கம் லாஜிக்காக பேச முடிவெடுக்க முடியாமல் தலைமை திணறுவதாக அறிவாலய வட்டாரம் கூறுகிறது. உட்கட்சி தேர்தலில் இருதரப்பினரும் ஏன் மூக்கை நுழைக்கின்றனர்? என்ன காரணம்?

வெற்றி வாய்ப்பை இழந்த பிறகு...
2026 சட்டசபை தேர்தல் தோல்விக்கு என்ன காரணம்? என்பதை ஆராய ஒரு குழுவை திமுக அமைத்தது. அந்த குழுவும் 234 தொகுதிகளிலும் தகவல்களை திரட்டி இதுதான் காரணம் என பண்டல் பண்டலாக கருத்துக்கள் அடங்கிய காகிதங்களை தலைமையிடம் ஒப்படைத்தது. மூத்த நிர்வாகிகளின் முகத்தை பார்க்காமல் இளைஞர்களை இறக்கினால் தான் கட்சியின் கட்டமைப்பு வலுவாகும் இல்லையென்றால் கவலைக்கிடமாகிவிடும் என முடிவெடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தை ஆகஸ்ட் 22ஆம் தேதி கூட்டினார்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஒரு மாவட்ட செயலாளர் 3 முறைதான் பதவியில் இருக்கலாம், மாவட்டங்களின் எண்ணிக்கை 77லிருந்து 110, 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என பல முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

முக்கோண சிக்கல்
இந்த தீர்மானத்தின் அடிப்படையில், 70 வயதை தாண்டிய 13 மாவட்ட செயலாளர்கள் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதற்கு மத்தியில் தனது ஆதரவாளர்களுக்கு தான் மாவட்ட செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என கனிமொழி ஒருபக்கம் ஒற்றைக்காலில் நிற்க, இளைஞர்களின் பெயர் அடங்கிய லிஸ்ட்டை உதயநிதியும் கையில் வைத்திருக்க, தங்களுக்கு பதில் தாங்கள் கை காட்டும் நபர்களுக்கு தான் மாவட்ட செயலாளர் பொறுப்பை வழங்க வேண்டும் என மூத்த நிர்வாகிகளும் கதவை தட்ட முக்கோண சிக்கலுக்கு ஆளாகியது திமுக தலைமை.

என்ன தான் சிக்கல்?
திமுகவினர் ஆவலுடன் எதிர்பார்த்த மாவட்ட செயலாளர்களுக்கான உட்கட்சி தேர்தல் குறித்த எந்த தகவலுமே வெளியாகவில்லை. மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஏன் இந்த இழுவை? உட்கட்சி தேர்தலை நடத்துவதில் அப்படி என்னதான் சிக்கல்? என அறிவாலய வட்டாரங்களிடம் மெல்ல விசாரித்தபோது உள்ளுக்குள் ஒரு புதுப் பிரச்சினை ஓடிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

உட்கட்சி தேர்தல் நடத்தினால்...
பகுதி, நகரம், ஒன்றியம், பேரூர், வட்டம், கிளைகளுக்கு மட்டுமே உட்கட்சி தேர்தலை நடத்துங்கள், தற்போதைக்கு மாவட்டத்திற்கு ஒரு பொறுப்பாளரை நியமித்தால் போதும் என மூத்த நிர்வாகிகள் கோரிக்கை வைக்கிறார்களாம். அவர்கள் ஏன் இப்படி ஒரு கோரிக்கையை வைக்க வேண்டும் என ஆராய்ந்தால் அனுபவம் வாய்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதுதான் ஏற்கெனவே நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிருப்தியிலேயே உள்ளனர், அப்படி இருக்கும்போது உட்கட்சி தேர்தலை தற்போது வைத்தால் மூத்த நிர்வாகிகளோ அல்லது அவரது ஆதரவாளர்களோ மாவட்ட செயலாளர் ஆக முடியாது.

கனிமொழி திட்டவட்டம்
ஆனால், பொறுப்பாளராக மட்டுமே நியமித்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சரிக்கட்டி விடலாம் என்பது தான் மூத்த நிர்வாகிகளின் கணக்காக உள்ளது. ஆனால், திமுக துணை பொதுச்செயலாளரான கனிமொழி உட்கட்சி தேர்தலை நடத்தி உடனேயே மாவட்ட செயலாளரையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என தலைமையிடம் கூறுகிறாராம். உட்கட்சி தேர்தலோடே மாவட்ட செயலாளர் தேர்தலையும் நடத்தினால் தான் நிர்வாகிகளும், தொண்டர்களும் தாங்கள் நினைத்த ஒருவரையே தேர்ந்தெடுப்பார்கள் என கனிமொழி, கூறி வருகிறாராம்.

நீடிக்கிறது யோசனை
இத்தனை நாட்களும் உழைத்த மூத்த நிர்வாகிகள் சொல்வதை கேட்பதா? அல்லது லாஜிக்காக பேசும் கனிமொழி சொல்வதை கேட்பதா? என முடிவெடுக்க முடியாத தலைமை, உட்கட்சி தேர்தல் நடந்தால் நிர்வாகிகளுக்குள்ளும் மோதல் வெடிக்கலாம், கட்சியின் பெயர் கெட்டுப்போகலாம் என்ற பயத்திலும் யோசித்துக் கொண்டிருக்கிறதாம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved