Also Watch
Read this
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தவெக, திமுக, அதிமுக ஆகிய 3 கட்சிகளுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 3 கட்சிகளுமே இந்த 2 தொகுதிகளை கைப்பற்ற வேண்டிய தேவை என்ன? அந்த தொகுதிகளில் வெற்றி பெற்றால் அதன் தாக்கம் எப்படி இருக்கும்? தோல்வியை தழுவினால் அதன் வீரியம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

தமிழகத்தில் இடைத்தேர்தல்...
தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், 5 தொகுதிகள் வழக்கின் பிடியில் சிக்கி உள்ளதால், மற்ற 2 தொகுதிகளான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தலை அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். எண்ணிக்கையில் 2 தொகுதிகள் தான் என்றாலும் அதனை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அதிகமுறை ஆண்ட கட்சி என 3 பேருமே நிச்சயம் எதிர்கொண்டு வெற்றியை தழுவ வேண்டிய தேவையில் உள்ளனர். அதிலும், அதிமுகவிற்கு மிகவும் முக்கியமானது இந்த இடைத்தேர்தல்.

அதிமுகவின் கட்டாயம்
கடந்த தேர்தலில் 47 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற 6 பேர் இலையில் இருந்து உருவிக்கொண்டு தவெகவில் தஞ்சமடைந்தனர். இதெற்கெல்லாம் குதிரை பேரம் தான் காரணம் என மூச்சுக்கு 300 முறை சொல்லிவரும் அதிமுக, அதனை இந்த இடைத்தேர்தலில் மக்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 6 முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த அதிமுக தான் தமிழ்நாட்டை 31 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சியாகும். அதிகமுறை ஆண்ட கட்சி என்ற லீடிங்கில் முதல் இடத்தில் உள்ள அதிமுக தற்போது 3ஆவது இடத்தில் அமைதியாக அமர்ந்துள்ளது.

இரண்டுமே இலையின் கோட்டைதான்
விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆதங்கம் அக்கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இருக்கும் நிலையில், அதற்கு சில பிளஸ் பாயிண்டுகளும் இருப்பதாக அரசியல் நிலவரம் கூறுகிறது. இடைத்தேர்தல் களம் இரண்டுமே இலையின் கோட்டைதான். மதுராந்தகத்தில் 7 முறை, தாராபுரத்தில் 5 முறை வெற்றியை ருசித்துள்ளது

அதிமுக. 2021ஆம் ஆண்டு தேர்தலில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் உள்ள 57 தொகுதிகளிலும் தோல்வியே பரிசாக கிடைத்தபோதும் மதுராந்தகம் தொகுதிதான் மானத்தை காப்பாற்றியது.

இனி தவெக VS திமுக
சோதனை காலத்திலும் கைவிடாத மதுராந்தகம் இந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு கை கொடுக்குமா? கடந்த தேர்தலை போன்றே அதிமுகவிற்கு மக்கள் வாக்குகளை வாரி வழங்குவார்களா? அல்லது நியூ என்ட்ரியான தவெகவிற்கு தாவி விடுவார்களா? என்ற கேள்வி எழுகிறது. இத்தனைக்கும் மத்தியில், அதிமுக வெற்றி பெற்றால் இலையை அங்குள்ள மக்கள் பசுமையாக்கிதான் அழகு பார்ப்பார்கள் என்பது புலப்பட்டுவிடும். ஒருவேளை தோல்வியை தழுவினால் , இலையின் அத்யாயம் இதோடு முடிந்துவிட்டது, இனி தவெக VS திமுக என்ற டெம்ப்லேட்தான் நிரந்தரம் என்பதும் அரசியலில் முடிவாகிவிடும்.

திமுக வெற்றி பெற்றால்...
கடந்த தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலுமே வெற்றி பெற்ற அதிமுகவின் இடைத்தேர்தல் அரசியல் அப்டேட்டே இப்படி இருக்க திமுகவிற்கு அங்கு வெற்றியே கடந்தகாலங்களில் புளியங்கொம்புதான் என்பதால் கொஞ்சம் ரிஸ்க்காவே உள்ளது. யோசிக்காமல் வாக்களித்து விட்டோமோ என மக்கள் வருத்தத்தில் இருப்பதாக தவெக ஆட்சிக்கு வந்து 100 நாட்களை கடந்தும் மீண்டும் மீண்டும் பதிவு செய்வதை நிறுத்தவில்லை திமுக. அந்த பதிவு நிஜம்தான் என்பதை உறுதிபடுத்த வேண்டிய தேவை இந்த இடைத்தேர்தலில் திமுகவிற்கு உள்ளது.

அதேபோல், வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இடையூறில்லாத ஓட்டத்திற்கும் சரி, கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் சரி, இந்த இடைத்தேர்தல் ரிசல்ட் மிக மிக முக்கியம். ஆக, திமுக வெற்றி பெற்றால் 2 தொகுதிகளிலும் மக்கள் மத்தியில் தவெக மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை என்பது உறுதியாகும். ஒருவேளை திமுக தோல்வியை தழுவினால் 2 தொகுதிகளிலும் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் பலவீனம் ஏற்பட்டது ஏற்பட்டதுதான் என்றாகிவிடும்.

அதி முக்கியமான தேர்தல்
2026 தங்களுக்கானது என்பதை நிரூபித்து ஒட்டுமொத்த அரசியல் களத்தையே உற்றுநோக்க வைத்த தவெகவிற்குமே இந்த இடைத்தேர்தல் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வதற்கான அதி முக்கியமான தேர்தல் தான். அதுமட்டுமல்லாது, முதலமைச்சரின் 3 மாத ஆட்சி எப்படி உள்ளது என்ற மதிப்பீட்டையும், தவெகவின் செல்வாக்கு கிராஃப் எப்படி உள்ளது என்பதை அறியவும் இந்த இடைத்தேர்தல் முடிவு அவசியமான ஒன்றாக உள்ளது.

கடந்த தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் வெற்றி பெற்ற 2 வேட்பாளர்களுமே தற்போது தவெகவில் இருந்தாலுமே அவர்களுக்கான செல்வாக்கு அங்கு அப்படியேதான் உள்ளதா? அல்லது வாக்களித்த மக்களை எண்ணி பார்க்காமல் பொறுப்பின்றி பதவியை தூக்கி எறிந்துவிட்டு நடையை கட்டினால் என்ன நியாயம்? மீண்டும் எந்த நம்பிக்கையில் வாக்களிப்பது என்ற கேள்வியோடுதான் உள்ளார்களா? என்ற சந்தேகமும் எழுகிறது.

செல்வாக்கு தொடருமா?
கடந்த தேர்தலில் மதுராந்தகத்தில் தவெக 2ஆவது இடத்திலும், தாராபுரத்தில் 3ஆவது இடத்தில் இருந்திருந்தாலும் அதே மதிப்பீட்டையே தற்போதும் எடுத்துக் கொள்ள முடியாது. கூட்டணியின்றி தனியாக களம் கண்டபோதுதான் தவெவிற்கு இந்த இடங்கள். தற்போது கூட்டணியாக பரிணாமம் அடைந்துள்ளதால் அந்த ஆதரவாளர்களின் ஓட்டுகளும் வந்து விழுந்து பலத்தை கூட்டும். இப்படி, பலமும் பலவீனமும் கலந்துகட்டி அரசியல் நிலவரம் இருக்க தவெகவினர் தற்போதே களப்பணியில் இறங்கி விட்டார்களாம்.

2026 தேர்தலில் ஏற்கெனவே வெற்றி பெற்று கூடுவிட்டு கூடு பாய்ந்தவர்களின் செல்வாக்கு தொடருமா? அல்லது ஆயிரம் இருந்தாலும் அதிமுகவில் இருந்து வந்திருக்க கூடாது என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் நீடிக்குமா? திமுகவின் கனவு நிறைவேறுமா? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved