Also Watch
Read this
திருச்செந்தூரில் புதிதாக அமைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் படிப்பக திறப்பு விழாவுக்கு வந்த விசிக தலைவர் திருமாவளவன், தனது முன்னிலையிலேயே கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அதிருப்தியடைந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார். அம்பேத்கர் சிலை அமைப்பது தொடர்பாக இரு பிரிவாக இயங்கி வரும் திருச்செந்தூர் விசிகவினருக்குள், 4 ஆண்டுகளாக புகைந்து வந்த பிரச்சனை, திருமாவளவன் முன்னிலையே வெடித்து சிதறியிருக்கிறது.



திருச்செந்தூரில் மோதல்...
விக்கிரவாண்டி மாநாடு தொடங்கி, கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்கள் வரை போகும் இடமெல்லாம், தன்னை பார்க்கும் ஆர்வத்தில் வரம்பு மீறும் சிறுத்தைகளாலும், எவ்வளவு கண்டித்தும் கேட்காமல் அவர்கள் அட்ராசிட்டியில் ஈடுபடுவதாலும் சற்றே சோர்ந்து தான் போயிருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். சொந்த கட்சியினரின் நடவடிக்கைகளால் ஏற்கெனவே அதிருப்தியில் உள்ள திருமாவளவனை, மீண்டும் அப்செட் ஆக்கியிருக்கிறது திருச்செந்தூர் சிறுத்தைகளின் மோதல்.

நான்கு ஆண்டுகளாக...
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் விசிக சார்பில் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலையும், படிப்பகமும் அமைக்கப்பட்டுள்ளது. சிலை அமைப்பது தொடர்பாக இரு பிரிவாக செயல்பட்டு வரும் விசிகவினருக்குள், 4 ஆண்டுகளாக பிரச்சனை புகைந்து வருவதாக கூறப்படுகிறது. சிலை அமைக்கப்பட்ட இடம் மற்றும் செலவு ஆகியவற்றில் இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

மோதல், அமைதி...
இதனால் அம்பேத்கர் சிலை இன்னும் திறக்கப்படாமல் உள்ள நிலையில், அதற்கு பின் ஆரம்பிக்கப்பட்ட பயிலகம் கட்டி முடிக்கப்பட்டது. நேரில் சென்று அந்த படிப்பகத்தை திறந்து வைத்த விசிக தலைவர் திருமாவளவன், தொடர்ந்து உட்கட்சி பூசலால் கிடப்பில் போடப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை பார்வையிட்டார்.

அப்போது இரு பிரிவினரும் ஒருவரை பற்றி ஒருவர் மாறி மாறி குறை கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. நிர்வாகிகளுக்குள் நிலவும் பனிப்போர் குறித்து விரிவாக கேட்டறிந்த திருமாவளவன், முதலில் சமாதானம் செய்ய முயன்றார்.

ஆனால், நிர்வாகிகளோ தனது பேச்சை காதிலேயே வாங்காமல், தொடர்ந்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால், பொறுமை இழந்த திருமா அங்கிருந்து அமைதியாக புறப்பட்டுச் சென்றார்.

திருமாவளவன் சென்றபிறகு...
அவர் புறப்பட்டுச் சென்றதும் விசிக நிர்வாகிகள் ஒருவரை ஒருவரை சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை தடுக்க முடியாததால், பிடித்து இழுத்து பிரித்து விட்டனர்.


மின்தடையால் அதிருப்தி
இது ஒரு புறமிருக்க படிப்பகத்தை திறந்து வைத்த திருமாவளவன், மேடை ஏறி தொண்டர்களை பார்த்து கையசைத்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விசிகவினர் செல்போன்களில் டார்ச் லைட்டுகளை ஒளிரவிட்டபடி, கூச்சலிட்டு அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved