Also Watch
Read this
தமிழகத்தில் 15,300 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. முதலமைச்சர் விஜய் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதலமைச்சரின் லண்டன் பயணம்
இதுதொடர்பாக, தமிழக அரசு கூறி இருப்பதாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை நிறுவி விரிவுபடுத்துவதற்காக, தமிழ்நாடு அரசுக்கும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
முதல்வர் விஜய் முன்னிலையில் 14ஆம் தேதி லண்டனில், தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி நிறுவனத்திற்கும், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. உலகளாவிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான விருப்பக் கடிதத்தை வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து அக்குழுமத்தினர் முதலமைச்சரை சந்தித்து விளக்கிக் கூறினர்.

முதலீடு, வேலைவாய்ப்புகள்...
வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், நோக்க கடிதமும் சேர்ந்து ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளைக் கொண்டிருப்பதோடு, தமிழ்நாட்டில் 10,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
45க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டுவரும் முன்னணி பன்னாட்டு நிறுவனமான 'சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் தமிழ்நாட்டில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், மதர்சன் குழுமம் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான புதிய முதலீட்டு வாய்ப்பு மூலம் தமிழ்நாட்டில் சுமார் 7,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு மேம்பட்ட உற்பத்தித் திறன், உலகளாவிய பொறியியல் நிபுணத்துவம் மற்றும் புதிய தொழில்நுட்பக் கூட்டாண்மைகளைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் தனது மின்மாற்றி உற்பத்திப் பணிகளின் அடுத்த கட்டத்திற்காக ரூ.300 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம் 400 புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இந்த ஆலை, மேம்பட்ட மின் மற்றும் விநியோக மின்மாற்றி உற்பத்தியில் தமிழ்நாட்டின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மதிப்புக் கூட்டலையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி, சென்னையில்...
தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஸ்வீடனின் சிக்மா டெக்னாலஜி குழுமம், எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.

ஆயிரம் கோடி முதலீடு, 2000 வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனம், ஒரு சர்வதேச நிறுவனத்திற்காக, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை அமைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த உலகளாவிய திறன் மையம் (GCC) சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டுடன், 2,000க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மையம், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சென்னையில் உள்ள மவுண்ட்- பூந்தமல்லி சாலைப் பகுதியிலுள்ள GCC வழித்தடத்தில் அமையும்.

ரூ.3,000 கோடி முதலீடு
ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விரும்பத்தக்க இடமாகக் கருதுவதாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்து, முதலமைச்சர் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் விருப்பக் கடிதத்தை சமர்ப்பித்தது. முன்மொழியப்பட்ட இந்த முதலீட்டைச் சாத்தியமாக்கவும், மாநிலத்தில் அதன் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறுவவும் தேவையான அனைத்து ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாகத் தமிழ்நாடு அரசு அந்நிறுவனத்திற்கு உறுதியளித்தது.

தொழிலதிபர்கள் சந்திப்பு
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர்
தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் பி.சாப்ரியா, இயக்குநர் ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா, ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் லண்டனில் முதலமைச்சரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, ஆகஸ்ட் 2026ல் நடைபெற்ற 'வெற்றி' தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட ரூ.2,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் உட்பட, தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழுமம் மேற்கொண்டுள்ள முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சரிடம் விளக்கினார்.

முதல்வர் விஜய் அழைப்பு
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தமிழ்நாட்டுடன் வர்த்தக மற்றும் வணிக தொடர்புகளை ஆழப்படுத்தவும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய முன்னணி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்தார். முதலீடுகளை எளிதாக்குவதிலும், மாநிலத்தில் வணிகங்களை வெற்றிகரமாக நிறுவி இயக்குவதற்குத் தேவையான தமிழ்நாடு அரசின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் என்றும் முதல்வர் விஜய் உறுதியளித்தார்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved