Also Watch
Read this
அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக, திமுக கொறடா எ.வ.வேலு உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

சபாநாயகருடன் சந்திப்பு
திமுக எம்எல்ஏக்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வசந்தம் கார்த்திகேயன் சார்பில் அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சாந்தியை சந்தித்து கடிதம் கொடுத்து உள்ளனர்.

இல்லாதவர்களை பற்றியே பேச்சு
இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த எ.வ.வேலு கூறியதாவது;
அவையில் இல்லாத நபர்களைப் பற்றிப் பேசுவது சட்டமன்ற விதிகளுக்கு எதிரானது. அவையில் உள்ள ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்துவது என்றாலும், அதுகுறித்த குறிப்பை முன் கூட்டியே சபாநாயகருக்கும், சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கும் வழங்கிய பின்னரே பேச வேண்டும். சட்டமன்றத்தில் இல்லாதவர்களை பற்றி பேசவே முடியாது. ஆனால், இல்லாதவர்களை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

டைவர்சன் பாலிடிக்ஸ்
எதிர்க்கட்சியாக, மக்கள் பிரச்சினை மற்றும் தேவை குறித்து கேள்வி எழுப்பும்போது, அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல் பழைய செய்திகளையும் தொடர்பில்லாத விவகாரங்களையும் பேசி அமைச்சர்கள் திசை திருப்புகின்றனர். டைவர்சன் பாலிடிக்ஸ் செய்கின்றனர்.

பழைய பஞ்சாங்கத்தையே எடுத்தால் எப்படி?
சர்க்காரியா கமிஷன் குறித்து பலமுறை மன்றத்தில் விவாதிக்கப்பட்டு விட்டது. கலைஞர் முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் பதில் சொல்லப்பட்டு உள்ளது. இதை ஏன் மீண்டும் பேச வேண்டும்? எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்த 116 நாட்களில் நடந்த குற்றங்களை பட்டியலிட்டார். அதற்கு பதில் சொல்லாமல் பழைய பஞ்சாங்கத்தையே எடுத்தால் எப்படி?
அன்றைக்கு திமுக சார்பில் 418 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆசிரியர் கி.வீரமணி சிறைக்கு சென்றார். ஆகவே, தியாகத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டோம். குற்றச்சாட்டு என்பது வேறு, குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை அல்ல. அன்று அவர் படித்தது எல்லாம் குற்றச்சாட்டு தான்.

எம்.ஜி.ஆர். என்ன சொன்னார்?
சர்க்காரியா கமிஷனில் சாட்சி அளித்த எம்.ஜி.ஆர். கூட, ‘தமக்கு எதுவும் தெரியாது. சேலம் வழக்கறிஞர் கண்ணன் என்னிடம் கொடுத்தார். அதை நான் கொடுத்தேன்,’ என்று கூறிவிட்டு வந்துவிட்டார். 28 குற்றச்சாட்டுகளுக்கும் எந்த ஆதாரமும் இல்லாததால் அவை கைவிடப்பட்டன. அதன்பின்னர் இந்திரா காந்தியே அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

மிசா விவகாரம்...
மு.க.ஸ்டாலினை மிசாவில் கைது செய்வதற்கு ஏடிஜிபியாக இருந்த சனா என்பவர் தான் கையெழுத்து போட்டார். மிசா காலத்தில் நடந்த கொடுமைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலும் இது பதிவாகியுள்ளது. இந்த வரலாற்றுத் தியாகங்களை பாராட்டக் கூட வேண்டாம், கொச்சைப்படுத்தக் கூடாது என்றும், அவை தொடர்பான தவறான பதிவுகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது
இவ்வாறு எ.வேலு தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved