Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 09:05 AM
ராணிப்பேட்டை சிப்காட் அருகே ஏரிக்கு குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர். 6,7,8 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர்களின் மரணத்தால் குடும்பத்தினரும், ஊர் மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

குளிக்க சென்ற மாணவர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகேயுள்ள தி.ரு.வி.க. நகர் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன்(13), நித்திஷ்(14), நித்திஷ்(13). இந்த 3 பள்ளி சிறுவர்கள், அதே பகுதியில் உள்ள மணியம்பட்டு ஏரிக்கு, இன்று பள்ளி விடுமுறை என்பதால், கோடையின் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் குளிக்க சென்றதாக தெரிகிறது. 3 பேரும் ஏரியில் குளித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நீரின் ஆழமான பகுதியில் 3 சிறுவர்களும் சிக்கினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்கை மீட்டனர். சிப்காட் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், 3 பேரும் இறந்து விட்டதாக உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

பெற்றோர் கதறல்
3 பேரின் உடலையும் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து சிப்காட் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த 3 சிறுவர்களின் பெற்றோர், மருத்துவமனையில் மகனே இறந்து விட்டாயா... என கண்ணீர் விட்டு கதறி கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. ஒரே நேரத்தில் ஒரே பகுதியை சேர்ந்த மூன்று பள்ளி சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved