Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 08:36 AM
தமிழ்நாட்டின் அரசியல், அதிகாரத்தை வட இந்தியர்கள் முடிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதங்கம் தெரிவித்து உள்ளார். எஸ்.ஐ.ஆர். மூலம் வட இந்தியர்கள் ஒன்றரை கோடி பேருக்கு பாஜக அரசு, தமிழகத்தில் வாக்குரிமையை பெற்று தந்து உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

கிருஷ்ணகிரி, பர்கூர் தொகுதியில் பிரச்சாரம்
கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சுகந்தி மற்றும் கவின் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய சீமான் பேசியதாவது;
கியூபா ஒரு புரட்சிநாடு, அங்கு கரும்பை மட்டும் சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு கல்வி, மின்சாரம், மருத்துவம் என அனைத்தும் அரசிடம் வைத்து உள்ளனர். அங்கு இலவச அறிவிப்புகள் உள்ளதா? ஆனால், தமிழகத்தில் இன்றைக்கு எவ்வளவு கொடுமையான ஆட்சியில் இருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இலவசம், கவர்ச்சி திட்டம்
மாற்றம் மாற்றம் என்று சொல்லும் மூன்று அரசியல் கட்சிகள், இலவசம் என்கிற கவர்ச்சி திட்டத்தை அறிவிக்கின்றனர். ஆட்சிக்கு வந்தால்
பத்தாயிரம் தருகிறோம், உரிமைத்தொகை 2000 ஆக உயர்த்துவோம், பிரிட்ஜ் தருவோம், என்று சொல்கிறார்கள், பிரிட்ஜில் என்ன வைக்க முடியும்? அந்த காய்கறிகளை யார் தருவது? விவசாயிகள் தான், மிக்ஸியில் என்ன அரைக்க முடியும்? இதெல்லாம் ஒரு திட்டமா? இவையெல்லாம் எங்கிருந்து கொடுப்பது? நாட்டையும் மண்ணையும் விற்பனை செய்து கடன் வாங்கி
கொடுப்பீர்களா? ஏற்கனவே 10.5 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. ஒரு கோடி ரூபாய் வட்டி செலுத்துகிறோம். தற்போது அறிவித்துள்ள திட்டங்களுக்கு 5 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டும், அதற்கு 2 லட்சம் கோடி வட்டி செலுத்த வேண்டும்.

சாராயத்தை ஒழிக்க முடியவில்லை
2000 தருகிறோம், ஐந்தாயிரம் தந்து விட்டோம், என்று பல்வேறு அறிவிப்புகளை
சொல்பவர்கள் கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்றவற்றை ஏன் இலவசமாக தரவில்லை? ஒருபுறம் இலவசங்களை வழங்கிவிட்டு, மறுபுறம் தண்ணீரை விற்பனை செய்கின்றனர். 2000 ரூபாய் உரிமை தொகை பெறும் ஒரு குடும்பம், மாதம் 3 ஆயிரம் ரூபாய்க்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்குகின்றனர். பல்வேறு இலவச திட்டங்களை அறிவிக்கும் கட்சிகள், சாராயத்தை ஒழிப்போம் என்று, எந்த கட்சியும் ஏன் தெரிவிப்பதில்லை?

வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன்
இன்றைக்கு பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு என்பது எவ்வளவு வேடிக்கை என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தாலிக்கு தங்கம் நான் தரமாட்டேன், ஆனால் தங்கம் வாங்கும் அளவிற்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன். பிறந்த குழந்தைக்கு தங்கம் போட மாட்டேன், ஆனால் பிரசவத்தை இலவசமாக வழங்குவேன், அப்படி செய்தால் அவர்கள் சம்பாதித்து, எத்தனை பவுன் நகைகளும் தங்கள் பிள்ளைகளுக்கு போட்டுக் கொள்ளலாம்.

அதிகாரம் அவர்களிடம் சென்றால்...
தமிழ்நாட்டில் ஒன்றரை கோடி வட இந்தியர்கள் உள்ளனர். மத்திய அரசு SIR மூலம் அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கி உள்ளனர். ஒன்றரை கோடி வட இந்தியர்கள் ஓட்டளித்தால், தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை அவர்கள் முடிவெடுப்பார்கள். அதிகாரம் அவர்களிடம் சென்றால், ஏற்கனவே நாம் மொழி, வரலாறு, வழிபாடு, நிலத்தை விட்டு வெளியேறி விட்டோம். அடுத்து இந்த நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழி இல்லை. இதை மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும். நாம் தமிழர் கட்சிக்கு ஒருமுறை வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு சீமான் வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved