Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 06:43 AM
எரிவாயு தட்டுப்பாட்டால் ஏற்கனவே மக்கள் தவித்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் நாடாளுமன்ற உரைக்குப்பிறகு, மேலும் பீதிக்கு உள்ளாகி இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தன்னால் இயன்றதை மாநில அரசு செய்து வரும் நிலையில் இத்தனைக்கும் பொறுப்பான மத்திய அரசு என்ன செய்கிறது? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
தொழிலாளர்கள் வேலை இழப்பு
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
"கோவிட் காலத்தைப் போல" என பிரதமர் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகி உள்ளனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
திசை திருப்பும் முயற்சி
தீவிர நடவடிக்கைகள் மூலம், இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு, இதில் இருந்து செய்திகளைத் திசை திருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை script-ஐ தற்போது கையில் எடுத்துள்ளது.
பா.ஜ.க. ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அ.தி.மு.க.வோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள்.
மாநில அரசின் கையிலா இருக்கிறது?
சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது?
மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. "இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன செய்கிறது?" என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved