Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 10:37 AM
நாடாளுமன்றத்தில் நிறைவேறிய திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதாவால் அவர்களின் உரிமை பறிபோகும் அபாயம் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து, திருநங்கைகளை கலந்தாலோசிக்காமல் வலுக்கட்டாயமாக திருத்தங்களை மேற்கொள்ள கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார்.

திருநங்கைகள் சட்ட திருத்த மசோதா
திருநங்கைகள் Transgender சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு உடனே நிறுத்தி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு;
ஒன்றிய அரசின் புதிய மசோதாவால் திருநங்கைகளின் உரிமைகள் பறிபோகும் அபாயம் உள்ளது. 'திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை, அந்தச் சட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களின் கருத்துகளைக் கேட்காமல் வலுக்கட்டாயமாக நிறைவேற்ற முடியாது.

திருநங்கைகளுடன் கலந்துரையாடி...
பாதுகாப்பு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்தை அந்தச் சமூகமே எதிர்க்கும்போது, அது திணிப்பாக இருக்கக்கூடாது; மாறாக, மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். மத்திய பாஜக அரசு இந்தத் திருத்தங்களை முன்னெடுப்பதற்கு முன், சற்று நிதானித்து, திருநங்கைகளுடன் கலந்துரையாடி, அவர்களின் உண்மையான உடன்பாட்டைப் பெற வேண்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்கள் வேலை இழப்பு
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட மற்றொரு பதிவில் கூறி இருப்பதாவது;
"கோவிட் காலத்தைப் போல" என பிரதமர் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகி உள்ளனர்.
பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

திசை திருப்பும் முயற்சி
தீவிர நடவடிக்கைகள் மூலம், இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு, இதில் இருந்து செய்திகளைத் திசை திருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை script-ஐ தற்போது கையில் எடுத்துள்ளது. பா.ஜ.க. ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அ.தி.மு.க.வோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள்.

மாநில அரசின் கையிலா இருக்கிறது?
சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. "இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன செய்கிறது?" என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved