Also Watch
Read this
By: Fyrose Banu

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி வளாகத்தில், ராஜபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான "விண்மீன்களைத் தொட்ட மனிதருடன் சந்திப்பு" என்ற தலைப்பிலான சிறப்பு விண்வெளி அறிவியல் வழிகாட்டல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ராஜபாளையம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரோட்டேரியன் பிரியா ஆனந்த் மற்றும் செயலாளர் ரோட்டேரியன் பி. கார்த்திகேயன் ஆகியோர் தலைமை தாங்கி ஏற்பாடுகளை முன்னெடுத்தனர். ரோட்டரி மாவட்டம் 3212-ன் மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் காந்தி கிருஷ்ணன் District Governor 3212 கௌரவ விருந்தினராகவும், Go4Guru நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரோட்டேரியன் கயாம்பூ ராமலிங்கம் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள், பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் கல்வித்துறை முனைவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் முக்கிய விருந்தினரான அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் (NASA) விண்வெளி வீரராகவும் விஞ்ஞானியாகவும் பணியாற்றிய டாக்டர் டான் தாமஸ் அதாவது கொலம்பியா மற்றும் டிஸ்கவரி விண்கலங்கள் மூலம் (STS-65, STS-70, STS-83, STS-94 ஆகிய) 4 முறை விண்வெளிப் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்தவரும்

விண்வெளியில் 1,040 மணி நேரத்திற்கும் மேலாக (44 நாட்கள்) கழித்து, பூமியை 692 முறை சுற்றிவந்து 1.7 கோடி மைல்களுக்கு மேல் பயணித்த சர்வதேசப் புகழ்பெற்ற விண்வெளி வீரருமான விண்வெளி வீரர் டாக்டர் டான் தாமஸ் மாணவ-மாணவியரிடையே புரொஜெக்டர் காட்சித் திரையிடல் மூலம் விண்வெளி அறிவியல் குறித்து விரிவான விளக்கவுரை ஆற்றினார். தனது உரையைத் தொடங்கிய டாக்டர் டான் தாமஸ், உலகளவில் விண்வெளி ஆய்வில் முத்திரை பதித்த இந்திய வம்சாவளி விண்வெளி வீரர்களின் பங்களிப்பையும் சாதனைகளையும் பெருமையுடன் எடுத்துக்கூறி மாணவர்களுக்கு ஊக்கமளித்தார். தான் விண்வெளித் துறைக்குள் நுழைந்து வெற்றிகரமான விண்வெளி வீரராக உயர்வதற்கு சந்தித்த கடுமையான சவால்கள், தொடர் தோல்விகளைக் கடந்து மேற்கொண்ட கடின உழைப்பு மற்றும் விண்வெளித் துறையில் சாதிப்பதற்கு முறையாக மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சிகள் குறித்து விளக்கினார்.

மேலும் மாணவ மாணவியர்கள் இடையே விண்வெளி குறித்து புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவியல் பதிவுகளை விவரித்த அவர், விண்வெளியில் சக வீரர்-வீராங்கனைகளுடன் குழுவாக இணைந்து விண்வெளியில் செயற்கைக்கோளில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக விண்வெளியில் நிலவும் புவியீர்ப்பு விசையற்ற தன்மை விண்கலத்தின் காற்றழுத்த சூழல், அங்குள்ள சிறப்பு உணவு முறைகள், விண்வெளி உடைகளின் செயல்பாடு மற்றும் விண்வெளியில் இருந்து பார்க்கும்போது புவியின் பேரழகு எவ்வாறு தோன்றும் என்பது போன்ற மாணவ மாணவியர்கள் இதுவரை அறிந்திராத பல சுவாரஸ்யமான அறிவியல் உண்மைகளை எளிய முறையில் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் அரங்கில், விண்வெளி அறிவியல் மற்றும் எதிர்காலத்தில் விண்வெளி வீரராவதற்கான வழிமுறைகள் குறித்து மாணவ-மாணவியர் எழுப்பிய பல்வேறு அறிவியல் சந்தேகங்களுக்கும் டாக்டர் டான் தாமஸ் மிகுந்த ஆர்வத்துடனும் புன்னகையுடனும் பதிலளித்து விளக்கமளித்தார்.

உலகப் புகழ்பெற்ற நாசா விண்வெளி விஞ்ஞானி ஒருவர் இந்தியாவுக்கு வருகை தந்து, அதிலும் குறிப்பாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு நேரில் வருகை தந்து பள்ளி மாணவ-மாணவியருடன் விண்வெளி குறித்து நேரில் கலந்துரையாடியது, அப்பகுதி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத வாழ்நாள் அறிவியல் அனுபவமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved