Also Watch
Read this
By: Manigandan Raja

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பாபநாசத்திலிருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு விழா கடந்த 3ம் தேதி கால்நாட்டுடன் தொடங்கி நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்து வந்த பக்தர்கள்
காரையார் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி சொரிமுத்து அய்யனார் கோயிலில் வளாகத்தில் உள்ள சங்கிலி பூதத்தார், கருப்பசாமி, பட்டவராயன், பிரம்மராட்சசி, பேச்சியம்மன் உள்பட பரிவார தெய்வங்களுக்கு நிவேதனம் படைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
பக்தர்களில் சிலர் சங்கிலி பூதத்தார் முன்பு வைக்கப்பட்டிருந்த சங்கிலியால் மார்பில் அடித்து தங்களது நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் பொங்கலிட்டும் , நெய் தேங்காய் விளக்கு, மாவிளக்கு ஏற்றியும், சொரிமுத்து அய்யனார், மாடசாமி, பேச்சியம்மாள், பட்டவராயர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
ஆடி அமாவாசை திருவிழாவில் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா இன்று மாலை கோவில் வளாகத்தில் நடைபெறுவதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved