Also Watch
Read this
வருகின்ற சட்டமன்ற தேர்தலில், சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த நயினார் நாகேந்திரன், பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது;
போர் சூழல் நேரத்திலும் கூட மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்துள்ளது. இதே போல் தமிழக அரசும் வரியை ரத்து செய்ய வேண்டும். பெண்களை இழிவாக பேசும் திமுகவினர் மீது, தமிழக முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அண்ணாமலைக்கு எந்த தொகுதி?
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தலில் நிற்பது தொடர்பாக தலைமை முடிவு செய்யும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வேறு ஏந்த கட்சிகளும் வர வாய்ப்புள்ளதா? என்பதை தற்போது கூற முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளிவருகிறது. அதன் அடிப்படையில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.

வதந்திகளை நம்ப வேண்டாம்
தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு என்பது பரஸ்பரம் பேசி முடிவு செய்யப்பட்ட ஒன்று. சில இடங்களில் அவர்களுக்கு அதிகமாக கொடுத்துள்ளோம், சில இடங்களில் எங்களுக்கு அதிகமாக கிடைத்துள்ளது. அதிமுக தொகுதிகளை பாஜக பெற்றுள்ளது என்பது அவதூறு. இதுபோன்ற பிரச்சாரம், வதந்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தொகுதிகளை கேட்டு வாங்கி விட்டோம் எனக் கூறுவது சரி இல்லை.

முதல்வர் இபிஎஸ் தான்
யார் வெற்றி பெற்றாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். தற்போது இருக்கும் முதல்வர், மக்களை பற்றி கவலை கொள்ளாமல் 5 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினையை மட்டுமே பார்த்துக் கொண்டு வந்தார். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே அடிப்படை. நான் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved