Also Watch
Read this
By: Manigandan Raja

நாகப்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து, பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.
நாகை நகராட்சியில் நாகப்பட்டினம் மற்றும் நாகூர் உள்ளிட்ட 36 வார்டுகள் உள்ளன. இப்பகுதி கடலோரப் பகுதி என்பதால் நிலத்தடி நீர் உவர்ப்பு நீராக மாறி, குடிநீராகப் பயன்படுத்த முடியாத நிலை நிலவுகிறது. இதனால் திருவாரூர் மாவட்டம் ஓடாச்சேரி மற்றும் ஒதியத்தூர் நீரேற்று நிலையங்களில் இருந்து குழாய் மூலம் நாகை நகராட்சிக்குக் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது.
கடந்த மே மாதம் முதல் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டன. மேலும், மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர்
திறக்கப்படாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தது. இதன் காரணமாக நீரேற்று நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, நாகை நகராட்சி முழுவதும் குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதங்களில் 5 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர், தற்போது 33-வது வார்டு அக்கரைகுளம் வடக்கு, அண்ணா நகர், நடராஜர் பிள்ளை தெரு மற்றும் 27-வது வார்டு திரௌபதியம்மன் கோவில் தெரு, தீமிதி திடல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குடிப்பதற்கு விலைக்குக் கேன் வாட்டர் வாங்கிப் பயன்படுத்தினாலும், மற்ற அத்தியாவசியத் தேவைகளுக்குத் தண்ணீர் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், உரிய திட்டமிடல் இல்லாமல் அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குடிநீர் விநியோகத்தைச் சீரமைக்கக் கோரி கோட்டைவாசல் படி பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே பகுதி மக்கள் தண்ணீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபடுவது இது மூன்றாவது முறை எனக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மறியலால் நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். உடனடியாகக் குடிநீர் கிடைப்பதற்கான பராமரிப்புப் பணிகளைத் துரிதப்படுத்திய அதிகாரிகள், இன்று மாலைக்குள் பணிகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் கலைந்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved