Also Watch
Read this
By: Fyrose Banu

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதிகளில் வீடு வீடாகச் செல்லும் துப்புரவு பணியாளர்கள், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள், குடியிருப்பு பகுதிகளின் மையப்பகுதிகளில் சாலையோரங்களில் குப்பை வாகனங்களை நிறுத்தி, அங்கேயே தரம் பிரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பணியின்போது, சில துப்புரவு பணியாளர்கள் கையுறைகள், முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, வெறும் கைகளால் குப்பைகளை தரம் பிரிக்கும் காட்சிகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, துர்நாற்றம் வீசும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக கைகளால் கையாண்டு, அவற்றை தனித்தனி பைகளில் சேகரிக்கும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி குப்பைகளை கையாள்வதால், துப்புரவு பணியாளர்களின் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளதா? வழங்கப்பட்டிருந்தால், அவற்றை பணியாளர்கள் முறையாக பயன்படுத்துகிறார்களா? அல்லது போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளின் மையப்பகுதிகளில் குப்பைகளை தரம் பிரிப்பதால், அப்பகுதிகளில் துர்நாற்றம் மற்றும் சுகாதார பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, துப்புரவு பணியாளர்களுக்கு கையுறைகள், முகக்கவசம் உள்ளிட்ட தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை நகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அதேபோல், பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்துகிறார்களா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பையும், பொதுமக்களின் சுகாதாரத்தையும் உறுதி செய்ய ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved