Also Watch
Read this
திமுக எம்பிக்களுக்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த நிலையில், அதற்கு திமுக நிபந்தனை விதித்துள்ளது.

என்ன செய்ய வேண்டும்?
இதுகுறித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;
கடந்த ஆண்டு மார்ச் மாதம், தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில், திமுக இப்போதும் உறுதியாக உள்ளது. எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும், தடுமாற்றமும் இல்லை.
நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணையில் தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக என்ன செய்ய வேண்டும்? என்று திமுகவுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை.

தேசிய அளவில் விவாதித்தோம்
முறையற்ற தொகுதி மறுவரையறையால் இந்திய அளவில் ஏற்படவுள்ள ஆபத்தை முதன்முதலாக எடுத்துரைத்து, அதற்கெதிரான வலுவான கருத்தை உருவாக்கி, ஒருமித்த குரல்களை ஒன்றிணைத்ததே திமுகவும், தலைவர் மு.க.ஸ்டாலினும் தான் என்பதை நாடறியும். சென்னையில் இதற்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, பாதிப்புக்கு உள்ளாகும் அனைத்து மாநிலங்களையும் ஓரணியில் திரட்டி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து, இந்த விவகாரம் குறித்து தேசிய அளவில் விவாதிக்க வைத்தோம்.

எங்களுக்கு தயக்கம் இல்லை
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில், உச்சகட்டத்தில் இருந்தபோதே, “தேர்தல் கூட எங்களுக்குப் பிறகுதான், தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்திருக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பதுதான் எங்களது முதல் பணி,” எனப் பிரகடனம் செய்து, தமிழகத்தில் உள்ள இல்லங்களின் முன் கருப்புக் கொடியேற்ற அழைப்பு விடுத்து, அந்தச் சட்ட முன்வரைவின் நகலை எரித்து எதிர்ப்புக் காட்டியவர் தான் ஸ்டாலின். எனவே, இவற்றின் அடிப்படையில், தற்போதைய அரசு ஆகஸ்ட் 8 அன்று அழைப்பு விடுத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்திலும் திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டு, எங்களது கருத்தைத் தெரிவிப்பதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை.

அனைத்துக்கட்சிக் கூட்டம்
ஆனால், அதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்கவும், தமிழகத்தில் உள்ள கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற நிபந்தனையைத் தமிழக அரசிடம் திமுக முன்வைக்கிறது. புதுக் கூட்டாளியான காங்கிரஸ் மனம் புண்படும் என்பதால் மேகதாது விவகாரத்தில் கள்ள மவுனம் காத்துக்கொண்டு, ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக மட்டும் கூட்டம் கூட்டுவதை ஏற்க முடியாது.

’டேக் டைவர்ஷன்’ வேண்டாம்
தொகுதி மறுவரையறையின் காரணமாக, தமிழகத்துக்கான பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படக் கூடாது. பாதிக்கப்பட்டால் அதைத் தடுக்கும் முன்னணிப் படையாகக் திமுக இருக்கும். அதேநேரத்தில், இன்றைய சூழலில் காவிரி உரிமையை மீட்பதும், மேகதாது அணையைத் தடுப்பதும் மிக மிக முக்கியமானவை. தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்த வேண்டிய அவசிய அவசரம் இப்போது எழுந்துள்ளது. இந்த நேரத்தில் தவெக அரசு ‘டேக் டைவர்ஷன்’ அரசியலை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.