Also Watch
Read this
மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென சட்டப்பேரவையில் உதயநிதி வலியுறுத்தினார். கர்நாடகத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்று பட்டு நிற்கும் நிலையில், தமிழகத்தில் கூட்டத்தை கூட்ட மறுப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
தமிழக சட்டப்பேரவையில், மேகதாது அணை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்க்கடன் தள்ளுபடிக்காகத் தான் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்று கூறிவிட்டு அரைகுறை தள்ளுபடி செய்தது ஏன்? முழு பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது? பயிர்க்கடன்கள் எப்போது முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்க வேண்டும்.

அனைத்துக்கட்சிக் கூட்டம்
மேகதாது விவகாரத்தில், இதுவரை தமிழக அரசு என்ன செய்தது? என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது? என்பதை தெரிவிக்க வேண்டும். மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சிகளும், டெல்லி சென்று வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவும் வலியுறுத்தி இருந்தோம். அனைத்துக்கட்சி கூட்டத்தை எப்போது கூட்டுவீர்கள்? மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு அமைந்த பிறகு இதுவரை இல்லாத வேகத்தில் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கின்றன. ஆனால், இங்கே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கு, தமிழ்நாடு அரசு மறுக்கிறது.

சாதாரண கேள்வி
தமிழக முதலமைச்சர், கர்நாடகா செல்வதாக வேளாண் அமைச்சர் பேட்டி தருகிறார். இன்னொரு அமைச்சர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறுகிறார். கர்நாடகா செல்வதாக வேளாண் அமைச்சர் கூறிய நிலையில், இரண்டு அமைச்சர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். முதலமைச்சர் விஜய் கர்நாடக செல்வதாக இருந்தாரா? மேகதாது விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. ஏன் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட மறுக்கிறீர்கள்? என்பதுதான் எனது சாதாரண கேள்வி.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.