Also Watch
Read this
தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடுவதை கட்டாயமாக்கும் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.

கர்ஜித்த முதல்வர் விஜய்
"தமிழ்னா கெத்து, தமிழ்னா தனி பவர்" என பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய், மாநில அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை கட்டாயமாக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
’வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து எப்போது பாடவேண்டும் என குழப்பம் ஏற்பட்டது. சில நிகழ்ச்சிகளில் மரபை மீறி தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

அனைத்துலகும் இன்பமுற...
இந்த விவகாரத்துக்கு ஒரு முடிவு கட்டும் வகையில், தமிழ்நாட்டில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடப்படுவதை கட்டாயமாக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் முன் மொழிந்தார். தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல அது நம் உயிர், நம் உணர்வு என்றார். ‘தமிழ்னா கெத்து; தமிழ்னா பவர், அந்த தமிழின் புகழை சொல்கிற தமிழ்த்தாய் வாழ்த்து, அனைத்துலகும் இன்பமுற என்று சொல்கிறதே தவிர எந்த மொழியையும் எந்த தனி நபரையும் அது தாழ்த்தி சொல்வதில்லை,’ என பெருமிதத்துடன் கூறினார்.

ஒட்டு மொத்த தமிழ்நாடும்...
’நாம் உயர்த்திப் பிடிக்கிற தமிழை பின்னாடி தள்ளினால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?’ என ஆவேசமடைந்த முதலமைச்சர், ’ஒரு கட்சிக்கு பிரச்சினை என்றால் சம்பந்தப்பட்ட கட்சி மட்டும் தான் போராடும்; ஆனால் தமிழுக்கு பிரச்சினை என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வந்து போராடும்,’ என எச்சரித்தார்.

’தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது,’ என்றும், ’தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவது அரசியலமைப்புக்கும், இந்திய ஒருமைப்பாட்டிற்கும் எதிரானது அல்ல என்றும் திட்டவட்டமாக கூறினார்.

திமுக ஆதரவு
முதலமைச்சரின் தனித்தீர்மானத்தின் மீது திமுக சார்பில் பேசிய முன்னாள் அமைச்சர் கோவி.செழியன், தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து கடந்த திமுக ஆட்சியில் தமிழுக்கு செய்யப்பட்ட சிறப்புகளை எடுத்துரைத்தார். அதுமட்டுமின்றி, தற்போதைய தீர்மானத்தை சட்டமாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதிமுக ஆதரவு
’அரசியலில் நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், தமிழின் உரிமை என வரும்போது இந்த பேரவை ஒரே குரலில் ஒலிக்கவேண்டும்’ என தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக சட்டமன்ற குழு தலைவர் இபிஎஸ், அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் தனித்தீர்மானத்தை முழு மனதுடன் ஆதரிப்பதாக தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிகளும் ஆதரவு
பேரவையில் உள்ள அனைத்து கட்சிகளும் வரவேற்றதை தொடர்ந்து முதலமைச்சரின் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved