Also Watch
Read this
பெண்களை உதாசீனப்படுத்திய திமுக கூட்டணி கட்சிகளுக்கு வரும் தேர்தலில் மரண அடி கொடுக்கவேண்டும் எனவும், மகளிருக்காக குரல் கொடுக்கும் கட்சி அதிமுக எனவும் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார். கரூர் மற்றும் ஈரோடு மாவட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், தமிழ்நாட்டில் வறுமை இல்லை என முதலமைச்சர் கூறி வரும் நிலையில், பிறகு ஏன் மக்கள் கிட்னியை விற்கிறார்கள்? எனவும் கேள்வி எழுப்பினார்.

தீவிர வாக்கு சேகரிப்பில் இபிஎஸ்
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;
எதிரி நம்மை சற்று பலவீனமாக நினைக்கிறார். அவர் பலவீனப்பட்டு, ஊரை விட்டு, மாவட்டத்தை விட்டே ஓடிப் போய்விட்டார். தமிழ்நாட்டு மக்களை சுரண்டிப் பிழைக்கும் ஒரு குடும்பத்துக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தான் தேர்தலில் போட்டி. ஒரு குடும்பம் தான் சுரண்டுகிறது. யார் குடும்பம், ஸ்டாலின் குடும்பம்.

இந்த தேர்தல்...
தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்கும், பண நாயகத்திற்கும் நடக்கும் தேர்தல். இந்த தேர்தலில் ஜனநாயகம் ஓங்க வேண்டும். இதற்கு நீங்கள் தேர்தலில் எடுக்கும் முடிவு, சரியான முடிவாக இருக்க வேண்டும். அதிமுக கூட்டணிக் கட்சியினர் மீது பொய் வழக்குப் பதிவு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுகவுக்கு சாதகமாக நடந்துகொண்டால் அதிகாரிகள் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். காவிரியாற்று மணல் ஆயிரக்கணக்கான லாரிகளில் கொள்ளை போவதை விஜயபாஸ்கர் தடுத்தார். ஆனால், அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளீர்கள். அதிமுக ஆட்சி மலரும், இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்.

சிறுமி முதல் பாட்டி வரை
திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. இந்த ஆட்சியில் 24 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக 6,999 வழக்குகள் சிறுமிகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் என்று சமூகநலத்துறை அமைச்சரே சொல்லியிருக்கிறார். அதற்கு ரூ.84 கோடி ரூபாய் நிவாரணம் கொடுத்ததை பெருமையாகப் பேசுகிறார். இந்த ஆட்சி நல்லாட்சியா? சிறுமி முதல் பாட்டி வரை பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. கொங்குப் பகுதியில் முதியோர்களைத் தாக்கி சொத்துகளை அபகரித்து, கொலை செய்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved