Also Watch
Read this
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா அணியை வீழ்த்தி, ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக வெற்றி மகுடம் சூடியது.

90 நிமிடங்கள் வரை கடுமையாக எதிர்த்து போராடி பலமான எதிரணியாக செயல்பட்ட அர்ஜெண்டினா அணி, கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் அணி கோல் அடித்ததால் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது.

ஃபெர்ரன் டோரஸ் 106ஆவது நிமிடத்தில் கோல் அடித்து ஸ்பெயின் அணியின் வெற்றிக்கு வழிகோலினார்.

உலகமே உற்று நோக்கிய...
உலகின் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான 23ஆவது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஜூன் 11ஆம் தேதி 48 அணிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

பல சுற்று ஆட்டங்களை கடந்து அர்ஜெண்டினாவும், ஸ்பெயினும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

உலகமே உற்று நோக்கிய இறுதிப் போட்டி, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட் லைஃப் மைதானத்தில், இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கியது.

சாதுர்யமான ஆட்டம்...
ஆட்டம் தொடங்கியது முதலே அர்ஜெண்டினாவுக்கு கடுமையாக டஃப் கொடுத்த ஸ்பெயின் அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
![]()
அர்ஜெண்டினா அணியும் அபாரமாக விளையாடியதோடு, அந்த அணியின் கோல் கீப்பர் மார்டினஸ் கடுமையாக போராடி, ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் லாமீன் யமால் உள்ளிட்டோர் அடித்த ஷாட்டுகளை கோலாக மாற விடாமல் மிகச் சாதுர்யமாக தடுத்தார்.

ஒன்றுக்கு பூஜ்ஜியம்...
சமபலம் வாய்ந்த இரு அணிகளும் கடுமையாக மோதிக் கொண்டாலும், முதல் 90 நிமிடங்களில் இரு அணிகளாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. 106ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் ஃபெர்ரன் டோரஸ், நிக்கோ வில்லியம்ஸ் உதவியுடன் ஒரு கோல் அடித்தார். 120 நிமிடங்கள் முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில், அர்ஜெண்டினாவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

2010ஆம் ஆண்டுக்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து, ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக பிஃபா உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஸ்பெயின் அணிக்கு உலகக் கோப்பையை வழங்கினார்.

ரூ.481 கோடி பரிசு மற்றும் மோதிரம்
இந்திய மதிப்பில் சுமார் 481 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக, உலகக்கோப்பையை வென்ற அணிக்கு சாம்பியன்ஷிப் மோதிரங்கள் அணிவிக்கப்பட்டன. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ஸ்பெயின் வீரர்கள் உலகக் கோப்பையுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்க காலணி விருது...
இரண்டாம் இடம் பிடித்த அர்ஜெண்டினா அணிக்கு 317 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை போட்டியாக கருதப்பட்டதால், வெற்றிக் கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என்று ஆவலுடன் காத்திருந்த அர்ஜெண்டினா வீரர்கள், அந்த கனவு தகர்ந்ததால் கண்ணீர் விட்டனர். மெஸ்ஸியும் கண் கலங்கினார்.

நடப்பு தொடரில் பிரான்ஸ் அணிக்காக 10 கோல்களை அடித்த கிலியன் எம்பாப்பே, அதிக கோல்களை அடித்ததற்கான தங்க காலணி விருதை தட்டிச் சென்றார்.

